'பகிரி படம் வந்தால் டாஸ்மாக் பத்தி பெரும் விவாதமே நடக்கும்!'- இசக்கி கார்வண்ணன்
தமிழ் சினிமாவில் முதன்முறையாக மதுபானக்கடையில் வேலை செய்பவர்களை பின்னணியாகக் கொண்டு ஒரு படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நாயகன், நாயகி இருவரது குடும்பமுமே டாஸ்மாக் கடையில் பணிபுரிகிறார்கள்.
படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் மது அருந்தும் காட்சி வைத்தாலே அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன இந்த சூழலில் இப்படி ஒரு ஐடியா எப்படி உருவானது?

படத்தின் இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடம் கேட்டோம்.
"இன்றைய இளைஞர்கள் அரசாங்க வேலையையோ, அல்லது வொயிட் காலர் ஜாப் எனப்படும் சொகுசான வேலையையோத்தான் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் டாஸ்மாக் பணியும் ஒன்று.
படத்தின் நாயகனும் நாயகியும் மதுபானக் கடையாக இருந்தாலும் இதுவும் அரசாங்க வேலை தானே என்றுதான் இந்த வேலையில் சேர்கிறார்கள். கடை கிடைக்கவில்லை என்பதால் தங்களது வீட்டையே டாஸ்மாக்காக மாற்றி வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் டாஸ்மாக் பணியாளர் ஒருவனின் காதல் கதைதான் 'பகிரி'.

இரு குடும்பத்து பெரியவர்களுமே குடிக்கு அடிமையானவர்கள். அதன் விளைவுகளையும் படத்தில் விளக்கியுள்ளேன். நாம் குடிப்பதற்கோ குடியை விற்பதற்கோ தயங்குவதில்லை. ஏனென்றால் குடி நம் வாழ்க்கையோடே ஒன்றாகிவிட்டது.
படம் முழுக்க டாஸ்மாக்கும், குடியுமாக இருக்கும். ஆனால் படம் முடியும்போது படத்தை பார்த்த இளைஞர்களுக்கு நாம் செய்வது சரியா? நமக்கு சோறு போடும் விவசாயத்தை வெறுப்பது சரியா? என பல கேள்விகள் நிச்சயம் எழும்.
முன்பெல்லாம் மதுபானக்கடையில் வேலை பார்க்க தயங்குவார்கள். ஆனால் இப்போது இளைஞர்கள் மதுபானக்கடையில் பணிபுரிய விரும்புகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலை ஏன் உருவானது என்பதும் படம் பார்ப்பவர்களுக்கு புரியும். இதனை விளக்கும்போது நிச்ச்யம் ஆட்சியாளர்களை வசனங்கள் குறிவைக்கும் என்பது தெரியும். அதற்காக நான் எந்தவித சமரசமும் செய்துகொள்ளவில்லை.
படம் பார்த்தபிறகு சென்சார் அதிகாரிகளே என்னிடம் 'படம் பார்க்க நாங்கள் நேரம் குறைவாகத் தான் எடுத்துக்கொண்டோம். அதன்பின் எங்களை ஒரு நீண்ட விவாதத்துக்கே அழைத்து சென்றுவிட்டது படம்' என்றார்கள். இதே விவாதம் படம் வெளியான பிறகு தமிழ்நாடு முழுக்க நடக்கும். ஏனென்றால் நான்

படத்தின் மூலம் கேட்டிருக்கும் கேள்விகள் எல்லாமே சாமானிய மக்கள் ஒவ்வொருவரின் மனதுக்குள் இருக்கும் கேள்விகள் தான். அவற்றை சாமானிய மக்களின் சார்பில் பதிவு செய்திருக்கிறேன்,'' என்றார்.
பகிரி படத்தில் நாயகனாக பிரபு ரணவீரன் நடித்திருக்கிறார். இவர் விஜய் டிவியின் 'கனாக்காணும் காலங்கள் தொடரின் நாயகனாக நடித்தவர். நாயகி ஷ்ரவியா. இவர் ஆந்திர வரவு.
ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன் என பல இயக்குநர்கள் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்கள். திருமாவேலன், சூப்பர்குட் சுப்ரமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இசை... நம்ம கருணாஸ்... எம்எல்ஏ கருணாஸ்!!


Click it and Unblock the Notifications











