கொடூர விமான விபத்து.. பிரபல ஹீரோயின் பலியானதாக தீயாய் பரவிய வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த நடிகை!
கராச்சி: பாகிஸ்தான் விமான விபத்தில் பிரபல நடிகை உயிரிழந்தாக வந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.
Recommended Video
பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று லாகூர் நகரில் இருந்து கராச்சிக்கு இன்று மாலை வந்துகொண்டிருந்தது.
விமானத்தில் 99 பயணிகளும் 8 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சி நகரை நெருங்கிய விமானம், தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்தது.

குடியிருப்பு பகுதி
அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அங்கிருந்த குடியிருப்பு பகுதிக்குள் விமானம் விழுந்து நொறுங்கியது. அடுத்த சில நொடியில் தீபிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. அந்தப் பகுதிகளில் வசித்து வந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீரர்கள்
இதையடுத்து தீயணைப்புத் துறைக்குத் தகவல்கள் பறந்தன. ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வேகமாக வந்தன. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்தப் பயங்கர விபத்தில், விமானத்தில் இருந்தவர்களும் குடியிருப்புப் பகுதியில் வசித்த சிலரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பயங்கர பீதியில் உள்ளனர்.

நடிகை ஆயிஷா
இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த விமான விபத்தில் பிரபல பாகிஸ்தான் நடிகை ஆயிஷா கானும் அவர் கணவரும் உயிரிழந்துவிட்டதாக, செய்திகள் வெளியாயின. இவர், ஏராளமான டி.வி.தொடர்களில் நடித்துள்ளார். பாகிஸ்தானில் அனைவருக்கும் அறிந்த முகம் என்பதால் இந்தச் செய்தி பரபரப்பானது.

பிரார்த்தனை
ஆனால், இது வதந்தி என்றும் தான் அந்த விமானத்தில் செல்லவில்லை என்றும் நடிகை ஆயிஷா விளக்கம் அளித்துள்ளார். இதுபோன்ற பொய்யான செய்திகளை யாரும் பரப்பவேண்டாம். உயிரிழந்தவர்களுக்காகவும் அவர்கள் குடும்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











