சங்கை அறுத்துவிடுவோம்.. கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. அடுத்த ஆக்ஷன் தெரியுமா?
சென்னை: சூர்யா நடத்திவரும் அகரம் ஃபவுண்டேஷனின் 15ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய கமல்ஹாசன், சனாதனம் பற்றி பேசினார். சூழல் இப்படி இருக்க அவரது அந்தப் பேச்சை வைத்து கமலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு சென்ற கமல்ஹாசன் சில வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்தார். அப்படி அவர் ரீ என்ட்ரி கொடுத்த விக்ரம் திரைப்படம் மெகா ஹிட்டானது. அந்தப் படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடித்த இந்தியன் 2 தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது. இப்படி எடுத்ததற்கு இரண்டாவது பாகத்தை எடுக்கமாலேயே இருந்திருக்கலாம் என்பதுதான் பலரது கருத்தாக அமைந்தது.
தக் லைஃபிலும் செம அடிதான்: இந்தியன் 2வில் விட்டதை தக் லைஃப் படத்தில் பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் கமல். ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நடந்தது. இப்படமும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி ட்ரோல்களையும் சந்தித்தது. கமலின் கரியரிலேயே இந்தியன் 2, தக் லைஃப் மாதிரி எந்தப் படமும் ட்ரோலை சந்தித்ததில்லை. அடுத்ததாக ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

அரசியலிலும் கவனம்: சினிமாவில் நடிப்பது, படங்களை தயாரிப்பது என கலைத்துறையில் மீண்டும் அவர் பிஸியாகியிருந்தாலும்; அரசியலிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அந்தவகையில் சமீபத்தில்தான் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றார். அதனையடுத்து டெல்லிக்கும் சென்று பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகரம் விழாவில்: ராஜ்யசபா எம்பியாக பதவியேற்ற சில நாட்களிலேயே; சூர்யா நடத்திவரும் அகரம் அமைப்பின் 15ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார் கமல்ஹாசன். அப்போது பேசிய அவர், 'சனாதான சங்கிலிகளை அடித்து நொறுக்கும் ஒரே ஆயுதம் கல்விதான்' என பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் பெரும்பாலானோரிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. பலரும் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்கள்.
கொலை மிரட்டல்: சூழல் இப்படி இருக்க கமலின் அந்தப் பேச்சு சனாதனவாதிகளிடம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடக நடிகர் ரவிச்சந்திரன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், 'சனாதனம் பற்றி பேசினால் கமலின் சங்கை அறுப்போம்' என கொலை மிரட்டல் விடுத்தார். அவரது இப்படி பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருப்பது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காவல் துறையில் புகார்: இந்நிலையில் கமலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மௌரியா மற்றும் 30க்கும் மேற்பட்ட மநீமவினர் சென்னை காவல் ஆணையர் அலுவகத்துக்கு சென்று புகார் அளித்தார்கள். அந்தப் புகாரில், 'கொலை மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











