ஊட்டி அருகே ‘பப்பரப்பா’ பட வேன் விபத்து... லைட்மேன் பலி
ஊட்டி: புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் 'பப்பரப்பா' பட வாகனம் ஊட்டி அருகே விபத்தில் சிக்கியதில் லைட்மேன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சென்னையைச் சேர்ந்த சினிமா கம்பெனி 'பப்பரப்பா' என்ற பெயரில் படமொன்றைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் ஷூட்டிங் ஊட்டி அருகே கெரடா கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நடைபெற்று வருகிறது.
விபத்து...
இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு கருவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பழைய மடால் வேன் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பிக் ஆப் ஜீப் மற்றும் கார் மீது மோதியது.
அதிர்ச்சி...
பின்னர் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவற்றை தகர்த்துக்கொண்டு மைதானத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த படப்பிடிப்பு குழுவினர், நொறுங்கிய வேன் அருகே சென்றனர்.
சிகிச்சை...
அங்கே படப்பிடிப்பு குழு ஊழியர்கள் சிவா, மோகன் ஆகியோர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனடியாக படக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலி...
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவா கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சிவா பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
உயிரிழந்த சிவா சென்னை வடபழனியைச் சேர்ந்தவர். அவருக்கு திருமணமாகி லட்சுமி(22) என்ற மனைவியும், பூரணசந்திரன்(3) என்ற மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து லவ்டேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











