Parasakthi Day 3 Box Office: 140 கோடி பட்ஜெட்.. திங்கட்கிழமை தியேட்டர்களில் பசுமை புரட்சி.. ஏன்?
சென்னை: டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன், காளி வெங்கட் மற்றும் கேமியோவாக ராணா டகுபதி, பேசில் ஜோசப் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 10ம் தேதி பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியான பராசக்தி திரைப்படம் சனிக்கிழமை உலகளவில் 27 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக டான் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
சாக்னிக் தகவல் படி இந்தியாவில் பராசக்தி திரைப்படம் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஞாயிற்றுக்கிழமையான நேற்று அதைவிட சற்றே குறைவாக 10.15 கோடி ரூபாய் (Early Estimates) வசூலை மட்டுமே பராசக்தி பெற்றுள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 13 கோடி வசூலை முதல் நாளில் ஈட்டிய பராசக்தி திரைப்படம் உலகளவில் 14 கோடி வசூலை ஈட்டியிருப்பது மிகப்பெரிய சாதனை தான். 2 நாட்களில் எப்படியும் 50 கோடி வசூலை உலகளவில் இந்த படம் அள்ளியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திங்கட்கிழமையான இன்று தமிழ்நாட்டிலேயே பல தியேட்டர்களில் வெறும் பச்சை நிறத்தில் மட்டுமே டிக்கெட் புக்கிங் இருப்பது தான் மிகப்பெரிய அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு: பராசக்தி திரைப்படம் தாய் மொழிக்கான முக்கியத்துவத்தையும் நாட்டில் எங்கே இந்தியை திணித்தாலும் அதற்கு மற்ற மாநிலத்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் போராடி உயிர்த்தியாகம் செய்து இரு மொழிக் கொள்கையை நிலை நாட்டினர் என்கிற வரலாற்று படமாக வெளியான நிலையில், படத்துக்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. ஒரு பக்கம் படம் சூப்பர் என பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், ஒரு பக்கம் திமுகவுக்கான அரசியல் பிரசார படமாக சுதா கொங்கரா எடுத்துள்ளார் என்றும் அண்ணா அருகே கருணாநிதியை அமர வைத்து விட்டார், இந்திரா காந்தியாக நடித்தவர் சுத்தமாக அந்த வலிமையான கதாபாத்திரத்துக்கு செட்டே ஆகவில்லை, தியாகிகள் பற்றிய படத்தில் கமர்ஷியலுக்காக தெலுங்கு பெண்ணுடன் காதல் காட்சிகள் தான் ஒரு மணி நேரம் ஓடுது என ஏகப்பட்ட கடுமையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
திங்கட்கிழமை சாபம்: தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல முன்னணி நடிகர்களின் படங்களும் வெள்ளிக்கிழமை வெளியானால், முதல் 3 நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாகவும் திங்கட்கிழமை டோட்டல் வாஷ் அவுட் ஆவதும் வாடிக்கையாக மாறியுள்ளது. பராசக்தி திரைப்படம் சனிக்கிழமை வெளியான நிலையில், 2 நாட்கள் மட்டுமே வசூல் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. திங்கட்கிழமையான இன்று அதிகபட்சமாக பல தியேட்டர்களில் பசுமை புரட்சி தான் தெரிகிறது.
பொங்கல் போட்டி பலமாகிடுச்சு: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகாமல் சோலோவாக பராசக்தி வெளியாகியே பெரிதாக வசூல் வேட்டை நடத்தவில்லை என்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வா வாத்தியார், தலைவர் தம்பி தலைமையில் மற்றும் திரெளபதி 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. ஏற்கனவே பிரபாஸின் பேய் படமான தி ராஜாசாப் மற்றும் சிரஞ்சீவி, நயன்தாரா நடித்துள்ள மன சங்கர வரபிரசாத் காரு உள்ளிட்ட தெலுங்கு படங்களும் சில தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ளன.
150 கோடி வசூல் வருமா?: இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் படத்தின் பட்ஜெட்டான 140 கோடியை தாண்டி 150 கோடி வசூலையாவது இந்த வாரம் ஈட்டுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வாரம் பொங்கல் விடுமுறை நாட்களில் மீண்டும் தீ பரவினால் தான் உண்டு!


Click it and Unblock the Notifications











