பராசக்தி சென்சார் பிரச்னை முடிந்தது.. சான்றிதழ் இதுதான்.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?.. நாளை ரிலீஸ் உறுதி
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாகவும், ரவி மோகன் வில்லனாகவும், ஸ்ரீலீலா ஹீரோயினாகவும், அதர்வா முக்கிய ரோலிலும் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் எக்ஸ் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25ஆவது படமாக உருவாகியிருக்கிறது பராசக்தி. இதில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, சேத்தன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பராசக்தி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வியாபார காரணங்களால் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே அதாவது ஜனவரி பத்தாம் தேதியை லாக் செய்தது பட தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ்.

சென்சாரில் சிக்கல்: ஆனால் படத்துக்கு சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. முதலில் படத்தை பார்த்துவிட்டு அதிகாரிகள் சில மாற்றங்கள் சொன்னதாகவும்; அதை செய்து மறு ஆய்வு கமிட்டிக்கு படக்குழு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என அவர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும்; அதற்கு இயக்குநர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து பிரச்னை: மொத்தம் 27 இடங்களில் அதிகாரிகள் கட் சொன்னதாகவும் தெரிகிறது. ஆனாலும் இயக்குநர் சுதா கொங்கரா அந்தக் காட்சிகளின் முக்கியத்துவத்தை கூறி; அவைகளை நீக்கினால் படத்தின் பலமே போய்விடும் என தொடர்ந்து சண்டை செய்ததாகவும் விவரமறிந்தவர்கள் கூறினார்கள். இருந்தாலும் சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்தது. எனவே திட்டமிட்டபடி ஜனவரி பத்தாம் தேதி படம் ரிலீஸாகுமா எனவும் ரசிகர்கள் பயந்தார்கள்.
கிடைத்தது சான்றிதழ்: அதேசமயம் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் எதையும் படக்குழுவினர் நிறுத்தவில்லை. இந்நிலையில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை அதிகாரிகள் வழங்கிவிட்டார்கள் என்றும்; நாளை திட்டமிட்டபடி படம் ரிலீஸாகும் என்றும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 42 நிமிடங்களாம். இதனால் ரிலீஸ் தொடர்பான அச்சங்கள் எல்லாம் விலகி; நாளைய நாளை பராசக்தியோடு கொண்டாடுவதற்கு எஸ்கே ரசிகர்கள் முழுவீச்சில் இருக்கிறார்கள்.
ஜனநாயகனுக்கு பிரச்னை: இதற்கிடையே விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்துக்கு சென்றது கேவிஎன் நிறுவனம். மேலும் ஒன்பதாம் தேதி ரிலீஸிலிருந்து தள்ளிப்போவதாகவும் அறிவித்தது. இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி உத்தரவிட்டார். ஆனால் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருக்கிறது மத்திய தணிக்கை குழு வாரியம். அந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











