Parasakthi: அண்ணா சொன்னதை நீக்கியாச்சு.. SK துண்டை இப்படி தூக்கி போடுற ஸ்டைல்.. பராசக்தி ஹீரோவே அவர் தான் போல
சென்னை: இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி உள்ள படம் பராசக்தி. தமிழ் சினிமாவில் கடந்த 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி படம் மிகப்பெரிய அரசியல் தாக்கத்தை திரைத்துறையில் ஏற்படுத்தியது. அதேபோல், இந்த பராசக்தி படமும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது. படம் இன்று அதாவது ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 600 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.
1965 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டமான மொழிப்போரை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளதால், படத்தில் பேரறிஞர் அண்ணாவின் காட்சிகள் இருப்பது போன்ற காட்சிகள் எல்லாம் டிரைலரில் இடம் பெற்றது. இப்படி இருக்கையில் பராசக்தி படத்திற்கு மொத்தம் 25 கட்களை சென்சார் போர்டு நிறுவனம் அளித்து, யு/ஏ சான்றிதழ் வழங்கியது. இது அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்தாலும், படக்குழு சில நூதனமாக முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அண்ணாதுரை: அதாவது சென்சார் தரப்பில் எந்தெந்த முக்கியமான காட்சிகளுக்கு கட் சொன்னார்களோ, அவற்றை எல்லாம் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக பேரறிஞர் அண்ணா, நான் ஆட்சிக்கு வந்து மூன்று முக்கியமான சட்டங்களைக் கொண்டு வந்தேன். ஒன்று தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இரண்டு சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம், மூன்று தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இங்கு ஆட்சி மொழி. இந்தி திணிப்புக்கு இங்கு அனுமதி கிடையாது என்பதுதான் அவை.
நீக்கப்பட்ட வசனம்: இந்த மூன்றையும் யாராவது பிற்காலத்தில் நீக்க முயற்சிக்கலாம். அப்படி நீக்க முயற்சிக்கும்போது யார் வேண்டுமானாலும் ஆட்சியில் இருக்கலாம். ஆனால் அப்படிச் செய்ய நினைப்பவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை தமிழ்நாட்டை இந்த அண்ணாதுரை தான் ஆண்டு கொண்டு இருக்கிறான் என்று பொருள்" என்று பொது மேடைகளிலும் மக்களவையிலும் பேசி இருப்பார். அப்படி பேசியதை படத்தில் வசனமாக வைத்ததை சென்சார் தரப்பில் நீக்கிவிட்டனர்.

கலைஞர்: இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகள் குறிப்பாக சிவகார்த்திகேயன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியை நினைவுக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக துண்டைத் தூக்கிப் போடும் ஸ்டைல், ரயிலை மறித்து நிற்பது போன்ற காட்சிகள் அவரைத்தான் நினைவுப்படுத்துகிறது. இந்த காட்சிகள் தியேட்டரில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவினர் இந்த படத்தை கொண்டாவதில் தனி கவனம் செலுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications











