சிவகார்த்திகேயன் எங்கே நன்றி மறந்தார்?.. விஜய் அவருக்கு என்ன செஞ்சாரு?.. திருப்பூர் சுப்ரமணியம் விளாசல்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் பராசக்தி திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கும் முன்னதாகவே ஜனநாயகன் படத்துக்கு போட்டியாக ஒன்பதாம் தேதி ரிலீஸாகும் என்றும்; அதற்கு சிவாதான் காரணம் என்றும் ஒரு தகவல் சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் பற்றி பேசியிருக்கும் வீடியோ வைரலாகியிருக்கிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த வருடம் வெளியான மதராஸி திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் கடந்த வருடத்தில் வெளியான அமரன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து கெத்து காண்பித்தது. இந்த வெற்றியின் காரணமாக எஸ்கேவின் மார்க்கெட் உச்சத்தில் சென்றிருக்கிறது. சம்பளத்தையும் பல மடங்கு ஏற்றிவிட்டார் என்றும் தெரிகிறது.
சுதாவின் பராசக்தி: இப்படிப்பட்ட சூழலில் அவரது 25ஆவது படமாக உருவாகியிருக்கிறது பராசக்தி. சூரரைப் போற்று படத்தை இயக்கி தேசிய விருது வென்ற சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் முதலில் சூர்யா ஹீரோவாக நடிக்க வேண்டியது. ஆனால் அவர் வெளியேறியதால் சிவா உள்ளே வந்தார். ஆவர் மட்டுமின்றி ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

மாணவர்களின் போராட்டம்: இப்படமானது தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் உயிர் நீத்த மாணவர்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பற்றி நீண்ட நாட்கள் பேச வேண்டும் என்று நினைத்ததாகவும்; அதை இப்போது பேசியிருப்பதாகவும் சமீபத்தில் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த விழாவில் இயக்குநர் சுதா கொங்கரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் அவுட் லைனே கூஸ்பம்ப்ஸாக இருப்பதால் படமும் அப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் ரிலீஸ்: இந்தப் படமானது ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்க்கு போட்டியாக களமிறங்கி தன்னுடைய மாஸை நிரூபிக்க நினைக்கும் சிவகார்த்திகேயன்; தயாரிப்பு தரப்பை நச்சரித்து ரிலீஸ் தேதியை ஒன்பதாம் தேதிக்கு மாற்றியிருக்கிறார் என சில நாட்களாக தகவல் ஓடுகிறது. அதுமட்டுமின்றி இத்தகவலை கேள்விப்பட்ட ரசிகர்களில் சிலரோ, 'விஜய்யோடு போட்டிப்போடும் அளவுக்கு சிவா வளர்ந்துவிட்டாரா; முதலில் தனுஷை எதிர்த்தார். இப்போது விஜய்யை எதிர்க்கிறாரா? என்றெல்லாம் விளாசிவருகிறார்கள்.
திருப்பூர் சுப்ரமணியம் காட்டம்: இந்நிலையில் இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியம் காட்டமாக தனியார் யூடியூப் சேனலுக்கு பேசுகையில், "விஜய்க்கு சிவகார்த்திகேயன் என்ன நன்றி செய்ய வேண்டும். சிவாவுக்கு விஜய் என்ன செய்துகொடுத்தார். பிறகு அவர் நன்றி மறந்துவிட்டார் என்று ஏன் சொல்ல வேண்டும். ஊடகவியலாளர்கள் இப்படித்தான் கேள்வி கேட்க கூடாது. துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுக்கும்படி இயக்குநர் ஒரு காட்சியை வைத்தார். உடனே அவர் நன்றியை மறந்துவிட்டார் என்று சொன்னால் என்ன பதில் சொல்வது?" என்றார்.


Click it and Unblock the Notifications











