பராசக்திக்கு வழி விட்டு இருக்கலாமே ஜன நாயகன்? எல்லாம் தெரிந்த விஜய் ஏன் அதைச் செய்யவில்லை?
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் ஒன்றுதான்; அது, பராசக்தி Vs ஜன நாயகன் பஞ்சாயத்துதான். ஒரு பக்கம் இதில் அரசியல் உள்ளது என்றும், மற்றொரு பக்கம் துப்பாக்கி கொடுத்து தூக்கி விட்ட விஜய்க்கு எதிராக செயல்படுகிறார் சிவகார்த்திகேயன் என்றும், இதை எல்லாம் கடந்து, பராசக்தி கலைஞர் கருணாநிதி எனவும் ஜன நாயகன் எம்.ஜி. ராமச்சந்திரன் எனவும் எல்லாம் கட்டம் கட்டி பேசி வருகிறார்கள்.
வழக்கமாக இரண்டு நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது என்றால் பரபரப்பு தொற்றிக் கொள்ளும். அதுவும் பொங்கல் போன்ற விழாக் காலத்தில் வெளியாகும் படங்களில் வசூல் கணக்கை மையமாக கொண்டு தான் வெற்றி என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் விஜயின் ஜன நாயகன் படமும் வெளியாகிறது. இந்த படங்கள் உருவாகும்போது இப்படியான திட்டமிடல் இரண்டு படக்குழுவினருக்குமே இல்லை. அதாவது ஜன நாயகனுடன் வெளியாக வேண்டும் என்று பராசக்தி படத்திற்கோ, பராசக்தி படத்துடன் போட்டி போட வேண்டும் என்று ஜன நாயகன் படக்குழுவுக்கோ திட்டமில்லை.
காரணம் ஜன நாயகன் 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று ஒரு முன் திட்டமிடலுடன் தான் படத்தின் அறிவிப்பே வெளியானது. அதேபோல் பராசக்தி படமும் 2026 பொங்கலுக்கு என்ற முன் திட்டமிடலுடன் தான் படத்தின் அறிவிப்பு வெளியானது. இப்படி இருக்கையில் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியது என்றால் அது விஜயின் ஜன நாயகன் படக்குழுவினர் தான். ஜனவரி 9ஆம் தேதி வெளியிடுகிறோம் என்று படக்குழு அறிவித்ததில் இருந்து தான் ரசிகர்களுக்கு இடையே பிரச்னை தொடங்கியது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் இணையதளங்களில் மிகவும் மோசமாக வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறார்கள்.

விஜய்க்கு கூடுதல் பொறுப்பு: இது எல்லாம் போதாது என்று, திமுகவின் சதி என்று பேசும் விஜய் ரசிகர்களையும் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த இடத்தில் பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டியது விஜய் தானோ என்ற கேள்வி எழாமல் இல்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளது என்றாலும், சில முக்கியமான காரணங்கள் விவாதத்திற்கு தகுதியானவை ஆக இருக்கின்றது.
அதில் முதல் காரணம் பராசக்தி படத்தின் கதை. இயக்குநர் சுதா கொங்கரா இந்த படத்தை புறநானூறு என்ற பெயரில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டபோதே இது, 1960 கால கட்டங்களில் தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களை மையமாக கொண்டது, என்பது மொத்த திரையுலகத்திற்கும் தெரியும். இந்த கதையில் இருந்து சூர்யா வெளியேறிய போது முன்னணி நடிகர்கள் பலரும் முயற்சிக்க, கடைசியில் சிவகார்த்திகேயன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல: சரி, விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் மட்டுமல்ல, அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் கூட. அப்படி இருக்கும்போது தமிழ்நாடு அரசு தனது கொள்கை முடிவுகளில் ஒன்றாக வைத்துள்ள இருமொழி கொள்கைக்கு பிரதான அடிப்படையே, மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு, இந்தி திணிப்பு எதிர்ப்பு தான். அப்படி இருக்கையில், இன்றை தலைமுறையினருக்கு மொழிப்போர் குறித்த ஒரு பார்வை, இரு மொழிக் கொள்கை குறித்த பார்வையை இப்படம் கடுகளவேனும் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தமிழ் சூழலில் சினிமா பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் சம காலத்திலும் இல்லை, கடந்த காலத்திலும் இல்லை.
அப்படி இருக்கும்போது, அந்த விழிப்புணர்வை பெரும்பான்மையான ரசிகர்கள் பெற வேண்டும் என்றால், விஜய் தனது படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை மாற்றிக் கொண்டு இருக்கலாம். அதாவது இந்த படத்தின் கதைக்காகவே, இந்த படத்தை தமிழ்நாட்டில் அதிகமானோர் பார்க்க வேண்டும், படம் வணிக ரீதியாகவும் வெற்றி பெற வேண்டும் என தளபதி விஜய் யோசித்து இருக்கலாம். வணிக வெற்றியைக் கடந்து படத்தின் கருத்து முக்கியத்துவத்திற்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம். சரி, விஜய் படம் வருகிறதே என்று, சிவகார்த்திகேயன் தனது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். அது குறித்து பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனே தெளிவாக பேசிவிட்டார்.

எது ஆரோக்கியம்: குறிப்பாக, விஜய் தரப்பிடம் நேரடியாகவே பேசியதாகவும், விஜய் தனக்கு வாழ்த்து சொன்னதாகவும் தெரிவித்தார். ஆனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இடையில் நடைபெறும் வாக்கு வாதம் என்பது மிகவும் மோசமாக சென்று கொண்டு உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய அறிவுரையைச் சொல்லிவிட்டார். மேலும் விஜய் மீது தனக்கு இருக்கும் மரியாதையையும் வெளிப்படுத்தி விட்டார். இது உள்ளபடியே பாராட்டுக்குரியது, ஆரோக்கியமானதும் கூட.
ஆனால் விஜயோ விஜய் தரப்பிலோ, அவரது விர்ச்சுவல் வாரியர்ஸிடம் கண்ணியத்தை கடைபிடிக்க சொல்லாதது ஏமாமற்றமே. விஜய் அப்படியான அறிவுரையைச் சொல்லவில்லை என்றால், படம் வெளியாகும் காலத்தில் ரசிகர்களுக்கு இடையில் மோதலைக் கூட உருவாக்கும் அபாயம் உள்ளது. அதற்கு கடந்த காலத்தில் நடைபெற்ற பல சான்றுகள் உள்ளது. பெரும்பான்மையான ரசிகர்கள் அப்படி இல்லை என்றாலும், சமூக வலைதளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கான ரசிகர்கள், மோசமாகவே செயல்பட்டு வருகிறார்கள், அதை எல்லா தரப்பு ரசிகர்கள் கை விடுவது ஒரு நாகரீக சமூகத்திற்கு நல்லது.
ரசிகர்களின் தப்பு கணக்கு: இன்று அதாவது ஜனவரி 4ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படுவதாக முன்னரே அறிவித்தது படக்குழு. அதே போல், நேற்று நடைபெற்ற பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சன் டிவியில் ஒளிபரப்படும் என்று படக்குழு அறிவித்தது. அதற்கும் ரசிகர்கள் தரப்பில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சி ஒளிபரப்பு டி.ஆர்.பி-ஐக் குறைக்க திமுகவும் பராசக்தி படக்குழுவும் இப்படிச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை விஜய் ரசிகர்கள் இணையத்தில் எழுப்புவதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது, அடுத்த வாரம் வெளியாகும் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொலைகாட்சியில் ஒளிபரப்ப அதுவும், வார இறுதி நாட்களில் ஒளிபரப்ப இருக்கும் ஒரே நாள் இன்று மட்டும் தான். படத்தை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவேண்டிய பொறுப்பு படக்குழுவுக்கு உள்ளது. அதை இணையவாசிகளும் விஜய் ரசிகர்களில் சிலரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் டான் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனம், சுதா கொங்கரா போன்ற இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநருடன் பணியாற்றும் போது சிவகார்த்திகேயன் மாதிரியான கணிசமான மார்க்கெட் வேல்யூ இருக்க கூடிய நடிகரின் பேச்சு எடுபடுமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் தான் நிர்பந்திக்கும் சம்பளத்தை அதுவும் தமிழ் சினிமாவில் ஏன் தென்னிந்திய சினிமாவிலேயே யாரும் வாங்காத சம்பளம் விஜய்க்கு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற படக்குழுவில் விஜய் சொல்வதுதான் முதலும் கடைசியும்.
விஜய்க்கு தெரியாதது இல்லை: இது மட்டும் இல்லாமல் விஜய் என்ற உச்ச நட்சத்திரத்தின் படம் எப்போது வெளிவந்தாலும் தமிழ்நாடே கொண்டாடி வரவேற்க போகிறது. விஜய் படம் வெளியாகும் நாள் திருவிழா தான் என்பதில் சந்தேகமே வேண்டாம். தனது படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் தான் தீர்மானிப்பார். விஜய்க்கு தெரியாமல் அவரது படத்தில் எதுவுமே நடக்காது என்ற பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் உள்ளது. அதே நேரத்தில் தனது அரசியல் ஆதாயத்துக்காக பராசக்தி படத்தின் ரிலீஸை விஜய் பயன்படுத்திக் கொள்கிறார் என்ற பேச்சும் அடிபடுவதை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் திரைத்துறையில் சிவகார்த்திகேயனை விட சீனியரான விஜய்க்கு தெரியாதது எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications











