கதையை சுட்டுட்டாங்க.. ஆஸ்கர் வென்ற பாரசைட் படக்குழு மீது வழக்கு.. மின்சார கண்ணா தயாரிப்பாளர் முடிவு
சென்னை: ஆஸ்கர் விருது வென்ற பாரசைட் படம் மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று கூறப்பட்டதை அடுத்து, அதன் தயாரிப்பாளர் வழக்கு தொடர உள்ளார்.
ஆஸ்கர் விருது வழங்கும் கடந்த சில நாட்களுக்குமுன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் கொரிய படமான பாராசைட் 4 ஆஸ்கர் விருகளை வென்று அசத்தியது.
சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இயக்குநர், சிறந்த படம் என 4 விருதுகளை இந்தப் பெற்றது.

மின்சார கண்ணா
ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம், சிறந்த படத்துக்கான விருதை பெற்று இருப்பது இதுவே முதல் முறை. ஆஸ்கர் விருதை வென்ற இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்தப் படம்

கே.எஸ்.ரவிக்குமார்
1999 ஆம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தை, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். விஜய் பணக்கார வீட்டுப் பையனாக நடித்திருந்தார். ரம்பா, குஷ்பு, மோனிகா கோஸ்டலினோ, மணிவண்ணன், கரண் உட்பட பலர் நடித்து இருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

காதலுக்காக
படத்தில் தொழிலதிபரான குஷ்பு வீட்டில் தனி ஆளாக வேலைக்கு சேருவார், பணக்கார வீட்டு பையனான நடிகர் விஜய். பின்னர் அங்கு பணிபுரியும் ஒவ்வொரு ஆளாக காலி செய்துவிட்டு, தனது குடும்பத்தை சேர்ந்த ஆட்களை பணியில் அமர்த்துவார். தனது காதலுக்காக இப்படி ஒரு வேலையை செய்வார் நடிகர் விஜய்.

காப்பிக்கு ஆஸ்கரா?
பாரசைட், மின்சார கண்ணா ஆகிய 2 படங்களின் கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வந்தார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சிலர் மின்சார கண்ணாவின் காப்பி படத்துக்கு ஆஸ்கர் விருது வழங்கி இருப்பதாக கேலி பதிவுகளையும் வெளியிட்டிருந்தனர்.

தகுதியான கதை
இந்நிலையில், இதுபற்றி மின்சார கண்ணா படத்தை இயக்கிய கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, நான் இன்னும் பாரசைட் படத்தைப் பார்க்கவில்லை. ஆனால் ரசிகர்கள் சொல்வதைப் பார்க்கும்போது, எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் 20 வருடத்துக்கு முன்பே, ஆஸ்கர் விருதுக்குத் தகுதியான கதையை நான் தேர்வு செய்திருக்கிறேன். நடிகர் விஜய் இந்தப் படத்தை அதிகம் விரும்பினார். ஆஸ்கர் விருது பெற்ற பாரசைட் குழுவை வாழ்த்துகிறேன் என்றார்.

பாரசைட் டீம் மீது வழக்கு
இந்நிலையில் மின்சாரக் கண்ணா படத்தின் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாரசைட் படக்குழு மீது சட்டப்படி வழக்குத் தொடர உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை சர்வதேச வழக்கறிஞரை வைத்து வழக்குத் தொடர இருக்கிறேன். அவர்கள் எனது படமான மின்சார கண்ணாவில் இருந்துதான் கதையை எடுத்திருக்கிறார்கள். சில கொரிய படங்களின் இன்ஸ்பிரேஷனில் நாம் படம் எடுத்தால் அவர்கள் வழக்குத் தொடுக்கிறார்கள். அதே போல நானும் வழக்குத் தொடர இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











