'யாரைப் பார்த்தாலும் நல்லாருக்கியா ஐயா?ன்னு விசாரிப்பார்..' பரவை முனியம்மா மறைவுக்கு நாசர் இரங்கல்!
சென்னை: பரவை முனியம்மாவின் மறைவு நடிகர் சமூகத்துக்கு மட்டுமன்றி, நாட்டுப்புற பாடகர்கள் சமூகத்துக்கும் பெரிய இழப்பு என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல நாட்டுப்புறப் பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா, இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 83.
தூள் படத்தில், நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெறும் 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி'என்ற பாடல், தமிழகம் முழுவதும் அவரை அடையாளம் காட்டியது.

செல்ல பேராண்டி
மதுரை மாவட்டம் பரவை என்ற ஊரை சேர்ந்த இவர், ஏராளமான நாட்டுப்புறப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடி இருக்கிறார். தூள் படத்தை அடுத்து, காதல் சடுகுடு, ஏய், கோவில், தேவதையை கண்டேன், சண்டை உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இரண்டாயிரத்துக்கும் அதிகமான மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

கலைமாமணி விருது
லண்டன், சிங்கப்பூர், மலேசியா உட்பட வெளிநாடுகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். டி.வி.யில் சமையல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்ற அவர், கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக, அவதிப்பட்டு வந்தார். அவரது மருத்துவச் செலவுக்கு நடிகர்கள், விஷால், சிவகார்த்திகேயன், தனுஷ் உட்பட பலர் உதவினர்.

நடிகர் நாசர்
இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடந்தது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அனைத்து நடிகர், நடிகை சமூகம் சார்பாக, நடிகர் நாசர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: பரவை முனியம்மாவின் மறைவு நடிகர் சமூகத்துக்கு மட்டுமன்றி, நாட்டுப்புற பாடகர்கள் சமூகத்துக்கு பெரிய இழப்பாகும்.

நல்லாயிருக்கியா ஐயா
திரையுலகில் சில காலங்கள்தான் நடித்தார் என்றாலும், பார்க்கும் அனைத்து நடிகர்களிடம் 'நல்லாயிருக்கியா ஐயா' என்று அன்புடன் விசாரிப்பார். தூள் படம் தொடங்கி 84 படங்களில் நடித்துள்ளார். அவர் வறுமையில் இருப்பது அறிந்து நடிகர் சங்கம் மூலமாகவும் நடிகர்கள் தனிப்பட்ட முறையிலும் உதவினோம். இப்போது காலமாகி இருப்பது கேட்டு வருந்துகிறோம். நாட்டுப்புற பாடல்களில் அவர் செய்த சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும். அவரது இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











