Parimala And Co Day 3 Box Office - பரிமளா அண்ட் கோ 3வது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட்
சென்னை: பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பரிமளா & கோ. அதில் ஜெயராம், ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே பெரும்பாலும் கொடுத்தார்கள். இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகியிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்கள் எடுப்பதில் முதன்மையானவர் பாண்டிராஜ். குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் உணர்வுகள், சிக்கல்கள் என அத்தனையையும் நேர்த்தியாக தனது படைப்பில் பேசக்கூடியவர். அப்படி அவர் எடுத்த படங்கள் சூப்பர் வெற்றியடைந்திருக்கின்றன. சில படங்கள் தோல்வியும் சந்தித்திருக்கின்றன. இப்போது அவர் தன்னுடைய ஜானரிலிருந்து கொஞ்சம் வெளியே வந்து இயக்கியிருக்கும் திரைப்படம் பரிமளா & கோ.

என்ன கதை?: இதில் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா, மிஷ்கின், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒரு கொலையை குடும்பம் எப்படி மறைக்கிறது; அதிலிருந்து எப்படி தப்பிக்கிறது என்பதை நகைச்சுவைகளை தூவி சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதே லைனில் பாபநாசம் வந்திருந்தாலும்; தன்னால் முடிந்த அளவுக்கு அந்தப் படத்தின் சாயல் இதில் அடிக்காத அளவுக்கு உருவாக்கியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜெயராம், ஊர்வசி ப்ளஸ்: படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தங்களது பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள். அதேசமயம் படத்தின் ஸ்க்ரீன் ப்ளே உள்ளிட்ட விஷயங்களில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாம் என்ற கமெண்ட்ஸ்களும் வருகின்றன. அத்தனையையும் தாண்டி ஜெயராம், ஊர்வசி ஆகியோரின் நடிப்பு பட்டையை கிளப்புவதாகவும்; அதுதான் படத்தின் ப்ளஸ் என்றும் கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.
அதிகரித்த கூட்டம்: முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன. அதன் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் தியேட்டரில் அதிகரித்தது. பலரும் தங்கள் குடும்பத்தோடு வந்து படம் பார்த்துவிட்டு சென்றார்கள். மேலும், க்ளைமேக்ஸில் வைக்கப்பட்டிருக்கும் கருத்து சமூகத்துக்கு தேவையானது என்றும் அவர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
வசூல் எவ்வளவு?: விமர்சன ரீதியாக டீசன்ட்டான வரவேற்பை பெற்ற படம்; பாக்ஸ் ஆஃபிஸிலும் அதே நிலைமையில்தான் நீடிக்கிறது. படம் வெளியாகி நேற்றுடன் மூன்று நாட்கள் நிறைவடைகின்றன. மூன்றாவது நாளான நேற்று அப்படம் இரண்டு கோடியே 23 லட்சம் ரூபாயை அள்ளியிருக்கிறதாம். மொத்தம் 1,223 ஷோக்கள் திரையிடப்பட்டதாகவும்; மூன்று நாட்களில் அப்படம் ஆறு கோடியே 70 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் கூறியிருக்கிறது. கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய தலைவன் தலைவி திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை அள்ளியது. இப்போது இந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய ரெஸ்பான்ஸை பெற தொடங்கியிருப்பதால் அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். இதே உற்சாகத்தோடு அடுத்தடுத்த படங்களுக்கான கதை பணிகளிலும் ஈடுபட தொடங்கியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
