கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் பரியேறும் பெருமாள்
Recommended Video

பனாஜி: 49 வது கோவா திரைப்படத் திருவிழாவில் நான்கு தமிழ்ப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
ஆண்டுதோறும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படத் திருவிழா நவம்பர் 20ஆம் தேதி துவங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில், சர்வதேச அளவில் பல திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட நான்கு தமிழ்த் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. இந்திய அளவில் மொத்தமாக தேர்வாகியுள்ள 22 திரைப்படங்களில் 4 திரைப்படங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை.
சமூக அடக்குமுறை மற்றும் தலித் அரசியலை மிக நேர்த்தியாகவும், நுணுக்கமாகவும் கையாண்டதற்காக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. இத்தகவலை பரியேறும் பெருமாள் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் உறுதிபடுத்தியுள்ளார்.
இயக்குனர் ராமின் பேரன்பு திரைப்படமும் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது. மம்மூட்டி, பேபி சாதனா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பேரன்பு கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது சினிமா ரசிகர்களுக்கும் கலை விரும்பிகளுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.
அதேபோல், ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ள முதல் படமான "டூலெட்" திரைப்படமும் திரையிடப்பட உள்ளது. இப்படம் தேசிய விருதை வாங்கியதோடு மட்டுமல்லாமல் பல நாடுகளில் திரையிடப்பட்டு 25க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம் ஆகும். இவற்றுடன் பிரியா கிருஷ்ணசாமியின் "பாரம்" திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications











