ஜாதி பெயரை சொல்லி வயிறு வளர்ப்பவனல்ல.. மன்னிப்பு கேட்ட பார்த்திபன்.. சத்தியமும் செய்யுறாரே
சென்னை: நடிகர் பார்த்திபன் தனது பேச்சால் பலரையும் வியக்க வைப்பவர், ஆச்சரியப்படுத்துபவர் என்று அனைவருக்கும் தெரிந்தது தான். தைரியமான அதே நேரத்தில் நக்கல், உள்ளர்த்தம் கொண்ட பேச்சுக்கு சொந்தக்காரர். அவருக்கு நிகர் அவர் தான் என்று கூறும் அளவுக்கு பேச்சாற்றல் மிக்கவர். இப்படி இருக்கையில் இவர் பவன் கல்யாண் நடிப்பில் உருவான படமான உஸ்தாத் பகத்சிங் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் தனது ஜாதி இது என்று குறிப்பிட்டு பேசினார்.
அவரது இந்த பேச்சு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பார்த்திபன் ஏன் இவ்வாறு பேசினார்? பார்த்திபன் இப்படிப்பட்டவரா என்று அதிருப்தி போஸ்ட்களும் கருத்துக்களும் தான் அதிகம் வெளிப்பட்டது. இது ரசிகர்களக் கடந்து, பார்த்திபன் என்ற தனி மனிதன் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதையை கேள்விக்குள்ளாக்கியது.

அதன் பின்னர் பார்த்திபன் தனது வருத்தத்தை தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்ட பதிவானது ரசிகர்கள் பலரது மத்தியில் கவனத்தை ஈர்த்தது. அதாவது, " சத்தியமாக சொல்கிறேன், எந்த உள் நோக்கமும் இல்லாமல், எந்த லாப நோக்கும் இல்லாமல், வாய்ப்புக்காகவோ, வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்தவறி ....இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது 'இவன்' உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன்.
தவறு நடந்துவிட்டது: அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்.
மனப்பூர்வமாக மன்னிப்பு: என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்.நன்றியுடன் , இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











