குப்பைப்படம்.. சர்ச்சைப் பேட்டி.. டபுள் மீனிங்.. பழைய க(பி)ணக்கை தீர்த்து கொண்ட சேரன், பார்த்திபன்!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தன்னைப் பற்றி பார்த்திபன் கடுமையாக விமர்சித்து தந்த சர்ச்சை பேட்டி தொடர்பாக சேரன் விளக்கமளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கியவர் இயக்குநர் சேரன். இவரெல்லாம் அங்கு தாக்கு பிடிக்க முடியுமா, இதெல்லாம் வேண்டாத வேலை, பிக் பாஸ் வீட்டை உடைத்து அவரை வெளியில் அழைத்து வரப் போகிறேன் பலரும் சேரனுக்கு ஆதரவாகப் பேட்டி கொடுத்தனர்.
ஆனால், அவர்கள் பேச்சை எல்லாம் பொய்யாக்கி பிக் பாஸ் வீட்டில் மக்கள் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் தங்கி, மக்களிடம் நல்ல பெயரோடு வெளியில் வந்து விட்டார் சேரன். இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

பார்த்திபன் பேட்டி
அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, மீராவால் எப்படி ஒருமாதிரியான அவப்பெயர் உண்டானதோ, அதேமாதிரி வெளியில் நடிகர் பார்த்திபன் அளித்த பேட்டியும் சேரனை அவமானப் படுத்துவது போல் ஆகி விட்டது. சேரன் எப்போதுமே மற்றவர்களைக் காயப்படுத்துவதில் வல்லவர் என பார்த்திபன் கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சர்ச்சை
குடும்பக் கதைகளை மட்டுமே தரும், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையிலான நல்ல திரைப்படங்களைத் தரும் மென்மையான இயக்குநராக அறியப் பட்ட சேரன் குறித்து, பார்த்திபனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றவர்களைக் காயப்படுத்துவது பற்றி சேரன் கவலைப்பட மாட்டார் என அவர் கூறியது பரபரப்பை உண்டாக்கியது.
பாராட்டு
நிச்சயம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததும் சேரன் இதற்கு தக்க பதிலடி தருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சேரனோ பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்தை மனதாரப் பாராட்டி ஒரு டிவீட் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், பார்த்திபன் திட்டிய விவகாரத்தை அவருக்கு ஞாபகப்படுத்தினார்.
டபுள் மீனிங்
அதற்கு பதிலளித்துள்ள சேரன், "ஏதோ ஒரு தவறான புரிதலில் சொல்லியிருக்கிறார்.. அவர் மேல் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்.. எந்தப்படத்தை பார்த்து அப்படிச்சொன்னேன் என தெரியவில்லை.. சொல்லியிருந்தால் அது கண்டிப்பாக குப்பை படமாக இருக்காது.. சற்று டபுள்மீனிங் தூக்கலாக இருந்திருக்கும். அதனால் சொல்லியிருப்பேன்.." என விளக்கம் அளித்துள்ளார்.
அவமானம்
சேரனின் இந்த விளக்கம் தொடர்பாக பார்த்திபன் வெளியிட்டுள்ள டிவீட்டில், "திரு ராமகிருஷ்ணன் இயக்கிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மேடையில் நீங்கள் பேசியதை எனக்கு காண்பித்தார்கள். மிகவும் வருந்தினேன். அவமானங்களில் ஒன்றாக மனதில் தேங்கித்தான் போனது.ஏதோ ஒரு தூண்டலில் அது வெளிபட்டது" எனத் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு
அதற்கு, "அந்த திரைப்படம் உங்கள் பாணியில் இருப்பதாக குறிப்பிட நினைத்தேனே தவிர குப்பைப்படம் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்க மாட்டேன்.. தவறி வந்திருந்தால் மன்னிக்கவும். புதியபாதை, ஹவுஸ்புல், க.தி.வ.டை, குடைக்குள் மழை, ஒத்த செருப்பு எல்லாம்பார்த்து என்னை மறந்து பேசியிருக்கிறேன்.. உங்களிடம்" என சேரன் மீண்டும் விளக்கமாக ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார்.
உரிமை
ஆனாலும் விடாத நெட்டிசன்கள், 'அவர் பேட்டியைப் பார்த்தீங்களா?' என சேரனிடம் கேட்டுள்ளனர். அதற்குப் பதிலளித்துள்ள சேரன், "பார்க்க வேண்டாம்.. எனக்கு அவரைப்பற்றிய நல்ல புரிதல் உண்டு... சொன்னாலும் அவர் எனக்கு மூத்தவர் சொல்ல உரிமை உண்டு.. நான் அவரைப்பற்றி என் மனதில் நினைக்கும் பிம்பம் தான் என் உண்மை.. நன்றி" என இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

பிணக்கு தீர்ந்தது
இதன் மூலம் பார்த்திபன் மற்றும் சேரன் இடையேயான பிணக்கு, மனக்கசப்பு நீங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க இயலாத பல நல்ல படங்களைத் தந்த, மாபெரும் இரண்டு இயகுநர்களின் மோதல் முடிவுக்கு வந்துள்ளது சினிமா ரசிகர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











