அஜித்தை கலங்கியபடி பார்த்திருந்தேன் - பார்த்திபனின் எமோஷனல் ட்வீட்
சென்னை: தன் துயரை காட்டாமல் ஆக வேண்டிய கடமையை செய்ய முன் சென்ற அஜித்தை கலங்கியபடி பார்த்திருந்தேன் என பார்த்திபன் எமோஷனலாக ட்வீட் செய்திருக்கிறார்.
அஜித்குமார் சமீபத்தில் துணிவு படத்தில் நடித்தார். இதனையடுத்து அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை லைகா தயாரிக்கவிருக்கிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

ஏகே தந்தை சுப்ரமணியம்
அஜித் தந்தை சுப்ரமணியத்தின் பூர்வீகம் பாலாக்காடு ஆகும். அவர் மோகினி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மோகினி கராச்சியை பூர்வீகமாகக் கொண்டாலும் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியா வந்துவிட்டார். இவர்களுக்கு அனூப் குமார், அஜித்குமார், அனில்குமார் என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் அனுப் குமார் தொழிலதிபராகவும், அனில்குமார் பேராசிரியராகவும் இருக்கின்றனர்.

மரணமடைந்த சுப்ரமணியம்
சுப்ரமணியம் பக்கவாத நோயால் கடந்த நான்கு வருடங்களாக பாதிக்கப்பட்டிருந்தார். 84 வயதான அவருக்கு வீட்டில் வைத்தே மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவரது உடல் பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அடுத்து அவருக்கு பலரும் தங்களது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துவருகின்றனர்.

பார்த்திபன் போட்ட எமோஷனல் ட்வீட்
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லாத போது வடியாமல் புதையும் கண்ணீர் எனக்கு பிடிக்கும். ஆறுதலுக்கு அப்பார்பட்டது அப்பாவின் இழப்பு. அந்த இழப்பின் வலியை கண்ணீருக்குள் புகுத்தி, அந்நீரை கீழ் இமைகளுக்குள் இருத்தி, கன்னம் வழிந்து தன்துயரை காட்டிக் கொடுத்து விடாமல் ஆறுதல் சொல்ல வந்தோரின் அன்பை மட்டும் இனிதாகப் பெற்றுக் கொண்டு,இனி ஆக வேண்டிய கடமையைச் செய்ய முன் சென்ற அவரை பின்னின்று நான் கலங்கியபடியே பார்த்திருந்தேன். என் தந்தையை இழந்த அன்று நான் நின்ற நிலையில்" என எமோஷனலாக ட்வீட் செய்திருக்கிறார்.

முதல் பட தயாரிப்பாளரை மறக்காத அஜித்
முன்னதாக அஜித்தின் தந்தை உடலுக்கு பார்த்திபன் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினார். அதனையடுத்து அவர் நேற்று பதிவு செய்திருந்த ட்வீட்டில், "தந்தையின் மறைவின் போது,நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச்சென்ற பண்பு அவருக்கானது" என குறிப்பிட்டிருந்தார்.

அதனால்தான் அவரை எல்லோருக்கும் பிடிக்கிறது
பார்த்திபனின் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டானது. அதுமட்டுமின்றி தந்தையை இழந்த துக்கத்திலும்கூட தனது முதல் பட தயாரிப்பாளரை மறக்காமல் அவருடன் துக்கம் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார். அதனால்தான் அஜித்குமாரை அனைவருக்கும் பிடிக்கிறது என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவந்தனர்.


Click it and Unblock the Notifications











