சாதி, மதமற்றவர் என சான்றிதழ்.. பார்த்திபனுக்கு மகிழ்ச்சி.. அணிந்து வந்த NO கண்ணாடிதான் ஹைலைட்
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். தான் இயக்கிய முதல் படத்திலேயே அதீத கவனத்தை பெற்ற அவர்; பிறகு இயக்கிய ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளையே மேற்கொண்டார். அதன் மூலம் தோல்விகளை சந்தித்தாலும் அந்த முயற்சியை மட்டும் அவர் கைவிடவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த மாதத்தில் ஆந்திராவில் பேசியபோது சாதிய ரீதியாக அவர் பேசிய விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கோலிவுட்டில் வித்தியாசமான மற்றும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் பார்த்திபன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் சிறந்த நடிப்பை வழங்க கூடியவர் அவர். அதேபோல் நடிப்பு, இயக்கம் மட்டுமின்றி பேச்சிலும், கவிதை எழுதுவதிலும் ரொம்பவே வல்லவர். எந்த நிகழ்ச்சிக்கு பேச போனாலும் வார்த்தை ஜாலங்களில் புகுந்து விளையாடுவார். அதன் காரணமாக அவருக்கு பாராட்டும், கவனமும் கிடைத்தாலும்; சமயங்களில் அவரது பேச்சு அவருக்கே பேக் ஃபயர் ஆகி சர்ச்சை, கண்டனத்தையும் சம்பாதித்து கொடுத்தது உண்டு.

திரிஷா பற்றி: அப்படித்தான் விஜய் - சங்கீதா - திரிஷா விவகாரம் பற்றி எரிந்துகொண்டிருந்த சூழலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் பார்த்திபன். அப்போது பேசிய அவர், "குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்க சொல்லுங்கள். பிரச்னை எதுவும் வராமல் இருக்க' என்று ஒரே போடாக போட்டார். இதனைப் பார்த்து கோபமடைந்த திரிஷா காட்டமாக ஒரு ட்வீட்டை போட்டிருந்தார். அதற்கு முதலில் வருத்தம் தெரிவித்த பார்த்திபன்; அடுத்தடுத்து திரிஷாவுக்கு எதிராக வீடியோக்களையும் போட்டார். ஒருகட்டத்தில் அதை நிறுத்திவிட்டார்.
அடுத்த சர்ச்சை: எப்படியோ திரிஷாவுடனான சர்ச்சை முடிவுக்கு வந்தது. அந்த சர்ச்சை அடங்கிய சில நாட்களிலேயே இன்னொரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங் பட விழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற பார்த்திபன், "நான் ஒரு நாயுடு பையன். ஆனால் சென்னையில் பிறந்து வளர்ந்ததன் காரணமாக தெலுங்கு எனக்கு வராது. அடுத்த முறை இங்கே வரும்போது தெலுங்கை நன்றாக பேசும்படி கற்றுக்கொள்வேன். இது சத்தியம்" என கூறியிருந்தார். அதை பார்த்த தமிழ்நாட்டு ரசிகர்களோ எதற்காக இப்படி சாதியை தூக்கி பிடிக்க வேண்டும் என்று விளாசிவிட்டார்கள்.
பார்த்திபனின் வீடியோ: அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பார்த்திபன் உடனடியாக வருத்தம் தெரிவித்தார்.மேலும் தனக்கு சாதியே பிடிக்காது என்றும்; அந்த மேடையில் பதற்றத்தின் உச்சத்தில் இருந்தேன். அப்படி பேசியது தவறுதான் என விளக்கமளித்தார். ஆனால் அவரை பலரும் விடுவதாக இல்லை. சூழல் இப்படி இருக்க திடீரென புதிய வீடியோவை களமிறக்கினார். அந்த வீடியோவில் சாதி இல்லை, மதம் இல்லை என்று சான்றிதழ் பெறப்போவதாகவும் தெரிவித்திருந்தார் அவர்.
நீதிமன்றம் உத்தரவு: இந்நிலையில் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை கொடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் இன்று நீதிமன்றத்துக்கு அணிந்து வந்திருந்த கண்ணாடியும் ஹைலைட் ஆகியிருக்கிறது. ஒரு கண்ணுக்கு N எழுத்து வடிவத்திலும் இன்னொரு கண்ணுக்கு 0 எழுத்து வடிவத்திலும் அந்த கண்ணாடி டிசைன் செய்யப்பட்டிருந்தது. சாதி, மதத்துக்கு நோ என்பதை குறிக்கும் விதமாக அப்படி ஒரு கண்ணாடியை அவர் அணிந்து வந்தார்.


Click it and Unblock the Notifications
