“என்ன தேவையோ அதை கண்டிப்பாக செய்வேன்”: காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிய பார்த்திபன்
சென்னை: தமிழில் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் நகைச்சுவை நடிகர் போண்டா மணி.
மறைந்த நடிகர் விவேக், வடிவேலு உட்பட பல நடிகர்களுடன் போண்டா மணி நடித்துள்ளார்.
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் போண்டா மணிக்கு பார்த்திபன் உதவி கரம் நீட்டியுள்ளார்.

குளத்தில் இருந்து வந்த போண்டா மணி
காமெடி நடிகர் போண்டா மணியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. வடிவேலுவுடன் அவர் நடித்த இந்த காமெடி சூப்பர் ஹிட் அடித்தது. வடிவேலு ஹாயாக ஒரு குளத்தின் அருகே நின்றுகொண்டிருக்க, தண்ணீருக்கு அடியில் இருந்து திடீரென வெளியேவருவார் போண்டா மணி. வடிவேலுவிடம் "அவன் உன்கிட்ட என்ன சொன்னான்னு கேப்பாங்க?, ஒன்னுமே சொல்லிறாதீய... அடிச்சுக் கூட கேப்பாய்ங்க... அப்பயும் ஒன்னும் சொல்லிறாதீய" என சொல்லிவிட்டு காணாமல் போய்விடுவார். கடைசி வரை வடிவேலுவுக்கு என்ன நடக்குது என தெரியாமல், போலீசாரிடம் அடி வாங்கி அல்லோலப் படுவார். இதுபோல இன்னும் ஏராளமான காமெடிக் காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் போண்டா மணி.

இலங்கையில் இருந்து வந்தவர்
இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் கேதீஸ்வரன் என்ற போண்டா மணி. சென்னையில் சினிமா வாய்ப்பு தேடிய அவருக்கு கே.பாக்யராஜ் இயக்கிய 'பவுனு பவுனுதான்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. "கேதீஸ்வரன் என்கிற பெயர் சினிமாவுக்கு சரியாக வராது. நான் கவுண்டமணி நீ போண்டா மணி" என்று கவுண்டமணி தான் இந்த பெயரை பெயரை மாற்றியுள்ளார். அதிகமாக போண்டா சாப்பிடுவதால் அவருக்கு இப்படி பெயர் வைத்தார் கவுண்டமணி. பின்னர் வடிவேலு குழுவில் இணைந்த போண்டாமணி இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். போண்டாமணிக்கு மாதவி என்ற மனைவி இருக்கிறார், இவர் மாற்றுத்திறனாளி. சாய்குமாரி என்ற மகளும், சாய் ராம் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் முறையே 12, 10ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

நேரில் சந்தித்த அமைச்சர்
போண்டா மணி தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், ஓமந்துரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போண்டா மணியை, அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது அவர், "போண்டா மணிக்கு சீறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. அவரது உறவினர்கள் யாராவது சிறுநீரகம் தானம் செய்வார்களா என்று விசாரிக்க சொல்லி உள்ளோம். கிடைக்காத பட்சத்தில் அரசு விதிகளின் படி அவருக்கு சிறுநீரகம் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதற்கான செலவு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் செய்யப்படும். அவருக்கு வேண்டிய சிகிச்சை அரசு சார்பில் செய்யப்படும்'' என்றார்

உதவிகரம் நீட்டிய பார்த்திபன்
இந்நிலையில், போண்டா மணிக்காக நடிகர் பார்த்திபனும் உதவி கரம் நீட்டியுள்ளார். போண்டா மணியை தொடர்பு கொண்டு பேசியுள்ள பார்த்திபன் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பார்த்திபன் "போண்டா மணி உடல்நலம் பற்றி கேள்விப்பட்டவுடன் நான் மருத்துவர் பக்தவத்சலத்துடன் பேசினேன். போண்டா மணிக்கு என்ன தேவையோ அதை செய்ய இருக்கிறேன். இப்போது அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக மருத்துவர் பக்தவத்சலம் கூறியுள்ளார். முதற்கட்டமாக போண்ட மணியின் அன்றாடத் தேவைக்கு வேண்டிய பண உதவியை என்னுடைய மனிதநேய மன்றத்திலிருந்து செய்திருக்கிறேன். மேலும் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வேன்" என பார்த்திபன் கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த உதவி ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











