சினிமாயணம் டூ சி.எம் ஆசனம்.. விஜய பேரரசர்.. முதலமைச்சர் விஜய்யை சந்தித்து பார்த்திபன் புகழாரம்
சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்றதிலிருந்து அவரை திரைத்துறையை சேர்ந்த பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபனும் நேற்று அவரை சந்தித்தார். அப்போது வழக்கம்போல் தனது ஸ்டைலில் வித்தியாசமாக வாழ்த்து சொல்லி; ராஜா வேடத்தில் விஜய் இருப்பது மாதிரியான புகைப்படத்தை ஃப்ரேம் செய்தும் கொடுத்தார்.
திமுக, அதிமுகதான் தமிழ்நாடு அரசியலின் முகங்களாக இத்தனை வருடங்கள் இருந்தன. அதனை விஜய் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உடைத்திருக்கிறார். மற்ற கட்சிகளின் துணையோடு அவர் முதலமைச்சராக பதவியேற்றாலும்; தவெக மொத்தம் 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. முதல் தேர்தலில் எம்ஜிஆர் வாங்கிய வாக்கு விழுக்காட்டினைவிடவும் விஜய் அதிகம் பெற்றிருப்பது கண்டிப்பாக ஆச்சரியத்துக்குரிய ஒன்றுதான்.

அடுத்தும் விஜய் ஆட்சிதானா?: முதலமைச்சராக பதவியேற்றதிலிருந்து எதிர்பார்த்தது போல் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதற்கெல்லாம் தனது செயலாலும், பேச்சாலும் பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்த்தால்; விஜய்யோ வழக்கம்போல் திமுகவை காரணம் காட்டி தப்பித்துவருகிறார். திருச்சி கிழக்கில் அவர் பேசியதை பார்த்து தவெகவினரே ரொம்ப அப்செட்டில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு விஜய்க்கு கிடைத்திருக்கிறது; அதை சரியாக செய்தால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய்யின் ஆட்சிதான்; இல்லையென்றால் மீண்டும் ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டியதுதான் எனவும் முணுமுணுக்கிறார்கள்.
சந்திக்கும் திரைத்துறையினர்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பல வருடங்கள் கழித்து திரைத்துறையிலிருந்து ஒருவர் முதலமைச்சராகியிருப்பதால்; சினிமாக்காரர்கள் எல்லாம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பலரும் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள். முதலமைச்சரும் தன்னை சந்திக்க வருபவர்களுக்கு தவறாமல் நேரம் ஒதுக்கி புன்னகையுடன் சந்தித்தும்; புகைப்படம் எடுத்தும் வழியனுப்பி வைக்கிறார்.
பார்த்திபன் சந்திப்பு: அந்தவகையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் நேற்று முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். அப்போது மன்னர் உடையில் விஜய் இருப்பது போன்ற புகைப்படத்தை ஃப்ரேம் செய்து அன்பளிப்பாக கொடுத்தார். மேலும், 'சினிமாயணம் டூ சி.எம் ஆசனம். அராஜகமற்ற ஆட்சியை தர அரகஜா திலகமிட்டு - விஜய பேரரசராக அரியணையை அலங்கரிக்கும் - உலக அரசியல் அதிர்Win முதல்வருக்கு வாழ்த்துகள்! +ப்ரியமுடன் பர்த்திபன் தேதி: என்றும்" என கவிதையும் எழுதி கொடுத்திருக்கிறார்.
அனைத்திலும் வித்தியாசம்தான்: பார்த்திபனை பொறுத்தவரை அனைத்திலுமே வித்தியாசத்தை விதைப்பவர். தன் திரைப்படங்களில் மட்டுமின்றி மேடை பேச்சுக்கள், இதுபோன்ற சந்திப்புகள் உள்ளிட்டவற்றில் தனது ஸ்டைலை வைத்துவிடுவார். அதை விஜய் சந்திப்பிலும் ஃபாலோ செய்திருக்கிறார். முன்னதாக, விஜய்யுடன் திரிஷா ஒரு திருமணத்துக்கு சென்றிருந்தபோது, 'குந்தவையை வீட்டிலேயே குந்த வைக்க சொல்லுங்கள்.. பிரச்னை எதுவும் வராமல் இருக்க' என சொல்ல; திரிஷா கொந்தளித்து ட்வீட் போட; அதற்கு பதிலடியாக பார்த்திபன் சில வீடியோக்களை இறக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
