ரசிகர்களை பயன்படுத்தாத பீரங்கி அஜித்.. திரிஷாவுக்கு மட்டுமில்லை.. விஜய்க்கும் பார்த்திபன் செம அடி
சென்னை: இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் எப்போதும் தனது மனதில் பட்டதை பேசிவிடுபவர். சமீபத்தில்கூட ஒரு நிகழ்ச்சியில் அவர், நடிகை திரிஷா பற்றி பேசிய குந்தவை கருத்து சர்ச்சையை ஏற்படுத்த; திரிஷா பதிலடி கொடுத்திருந்தார். தொடர்ந்து அதற்கு பதில் கொடுத்து பார்த்திபனும் வீடியோ போட்டிருந்தார். இந்நிலையில் அதே நிகழ்ச்சியில் அஜித்தை புகழ்ந்து பேசிய அவர்; விஜய்யை மறைமுகமாக கலாய்த்த விஷயம் பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர்களில் பார்த்திபனும் ஒருவர். கடைசியாக அவர் டீன்ஸ் படத்தை இயக்கினார். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கலக்கும் அவர்; கவிதைகளும் எழுதுவார். முக்கியமாக வார்த்தை ஜாலத்தில் கில்லாடி அவர். பல மேடைகளில் அவர் பேசியது பெரிய வரவேற்பை பெறும். அதுமட்டுமின்றி சர்ச்சைகளையும் கிளப்பிவிடும். அப்படித்தான் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலின் விருது விழாவில் கலந்துகொண்ட அவர் திரிஷா பற்றி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன பேசினார்?: அதாவது அந்த நிகழ்ச்சியில் திரிஷாவின் புகைப்படத்தை காண்பித்து அவர் குறித்து பேச சொல்ல; 'குந்தவை வீட்டிலேயே கொஞ்சம் குந்த வைத்தால் பிரச்னைகள் எதுவும் வராமல் இருக்கும்' என வார்த்தை ஜாலத்தில் விளையாடினார். அவர் அப்படி சொன்னதும் அரங்கத்தில் இருந்தவர்கள் கைத்தட்டல்களால் அதிரவிட்டார்கள். தங்கள் மனதில் இருப்பதை அவர் அப்படியே சொல்லிவிட்டார் என்று விஜய் ரசிகர்களே பார்த்திபனுக்கு ஆதரவாகத்தான் நின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திரிஷாவின் பதிலடி: அவரது இந்தப் பேச்சு திரிஷாவை ரொம்பவே ஹர்ட் ஆக்கிவிட்டது. அதனால் தனது எக்ஸ் பக்கத்தில் அவர், "எனது பெயரையும், புகைப்படத்தையும் காட்டப்போவதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறினார். உதவியாளர் மூலம் அந்த கோரிக்கை வந்தது. கடைசி நேரத்தில் எனது பெயரும், புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஒரு கருத்தினை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்த்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகம் கேட்க செய்யும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களது குண நலனை காட்டாது. பேசுபவரின் குணநலனையே காட்டும்" என தெரிவித்திருந்தார்.
ஓய்ந்த பிரச்னை: இதனையடுத்து வருத்தம் தெரிவித்திருந்த பார்த்திபன்; திரிஷாவின் ட்வீட்டால் ட்ரிக்கராகி மேற்கொண்டு சில வீடியோக்களை போட்டிருந்தார். அவற்றில், திரிஷாவால் விஜய்க்கு பாதிப்பு; அவரிடமிருந்து இப்படி ஒரு ட்வீட் வரும் என தெரிந்திருந்தால் நான் வருத்தமே தெரிவித்திருக்கமாட்டேன் என்று விளாசினார். தொடர்ந்து இது வளர்ந்துகொண்டே இருந்த சூழலில்; இனிமேல் திரிஷா பற்றி பேசமாட்டேன் என சொல்லி பார்த்திபனே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
புதிய பிரச்னை: இந்நிலையில் பார்த்திபனின் புதிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. திரிஷாவை பற்றி பேசிய அதே நிகழ்ச்சியில் அஜித் குறித்து பேசிய அவர், "ஏகே 47 என்பது தானியங்கி ரஷ்ய துப்பாக்கி. ஏகே 54 என்பது தான் இயங்க எப்போதும் ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி. தேர்தல் ஆணையத்துக்கு சென்று வாங்கும் ஒரு விசிலை விட; தேர்ந்த தன்னுடைய ரசிகர்கள் அடித்து கிழிக்கும் விசில் கோடான கோடி" என்று குறிப்பிட்டார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள்; அஜித்தை புகழ்ந்தால் அவரை புகழ வேண்டியதுதானே; எதற்காக எங்கள் தலைவரையும், சின்னத்தையும் இழுக்க வேண்டும் என கொந்தளிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications















