கோமாளி பட கதை பஞ்சாயத்து... விபூதி அடித்த பிரதீப்.. விழுந்து விழுந்து சிரித்த பார்த்திபன்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது.
இந்தப் படம் ரசிகர்களின் மிகப் பெரிய வரவேற்புடன் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது.
இந்தப் படத்தில் நடிகர் பார்த்திபனை ட்ரோல் செய்வதை போன்று ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும்.
இந்தக் காட்சியை பிரதீப் ரங்கநாதன் ஏன் வைத்தார் என பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஹிட் லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட இந்தப் படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து கெத்து காட்டியது. 12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூலித்தது பெரிய சாதனையாவே பார்க்கப்படுகிறது. திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

பார்த்திபனை ட்ரோல் செய்த பிரதீப்
பிரதீப் ரங்கநாதனுடன் இவனா, ராதிகா, சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த லவ் டுடே படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் "பக்காவா பேசிட்டு இருந்த நீ பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியே" என ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த சீனை பிரதீப் வேண்டுமென்றே வைத்து தன்னை ட்ரோல் செய்துள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

கோமாளி பட கதை பஞ்சாயத்து
லவ் டுடேவிற்கு முன்பாக ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தை இயக்கியிருந்தார் பிரதீப். இந்தப் படமும் லோ பட்ஜெட்டில் உருவாகி 60 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தப் படம் வெளியான போது கதை திருட்டு சர்ச்சை எழுந்தது. அதாவது பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கதையும், கோமாளி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக பிரச்சனை எழுந்துள்ளது. இதையடுத்து பாக்யராஜ் முன்னிலையில் இந்த கதை சர்ச்சை குறித்து பேசி, தனது உதவி இயக்குநருக்கு 10 லட்சம் வாங்கி கொடுத்துள்ளார் பார்த்திபன்.

விழுந்து விழுந்து சிரித்த பார்த்திபன்
இதனை மனதில் வைத்தே லவ் டுடே படத்தில் பார்த்திபனை பிரதீப் ரங்கநாதன் ட்ரோல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. லவ் டுடே படத்தை தியேட்டரில் பார்த்த பார்த்திபன், அவரை கலாய்த்து வைக்கப்பட்டிருந்த டயலாக்கை கேட்டு விழுந்து விழுந்து சிரித்துள்ளார். "பக்காவா பேசிட்டு இருந்த நீ பார்த்திபன் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டியே" என்ற வசனம், தன்னை பைத்தியம் என கலாய்ப்பதாக வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்திபனும் புரிந்துவிட்டாராம். ஆனாலும் தனக்கு பிரதீப் மீது கோபம் வரவில்லை, அந்தக் காட்சியை ரசித்து பார்த்தேன் எனக் கூறியுள்ளார் பார்த்திபன்.


Click it and Unblock the Notifications











