பொன்னியின் செல்வன் படமே நான் இன்னும் பார்க்கல.. என்ன சின்ன பழுவேட்டரையரே இப்படி சொன்னா எப்படி?
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2 ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட பார்த்திபன் தான் இன்னமும் பொன்னியின் செல்வன் முதல் பாகமே பார்க்கவில்லை என்பதை பளிச்சென சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மறுபக்கம் பெரிய பழுவேட்டரையரான சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தை பார்க்காத ஆளே இருக்க மாட்டாங்க என பேட்டி கொடுத்தது தான் செம காமெடி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஆடியோ வெளியீட்டு விழா
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் மற்றும் சிம்பு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா துலி பாலா, பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ரெட் கார்ப்பெட் லைவ்
லைகாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் பொன்னியின் செல்வன் 2 இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த பிரபலங்களின் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சி மற்றும் லைவ் செய்யப்பட்டது. மற்றபடி ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் வரும் ஏப்ரல் 14ம் தேதி புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெட் கார்ப்பெட் லைவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் ஒரு சில வார்த்தைகள் பேசினர்.

நான் இன்னும் பார்ட் ஒன்னே பார்க்கல
பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ள நடிகர் பார்த்திபன் தான் இன்னும் பொன்னியின் செல்வன் பார்ட் ஒன்னே பார்க்கவில்லை என்றும், ரசிகர்களுடன் தஞ்சையில் படம் பார்ப்பதாக அறிவித்து அங்கே சென்றால், ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டு படத்தையே என்னால் பார்க்க முடியவில்லை. அதற்கு பிறகு நான் இன்னமும் படத்தை பார்க்கவேயில்லை என்பது புதிய செய்தி என பேசினார்.

நல்ல வரவேற்பு
ஆனால், முதல் பாகத்தில் சிறு வேடத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்தாலும் எனது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்ததை பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டேன். இரண்டாம் பாகத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் என நம்புகிறேன் என பேசினார்.

1000 கோடி வசூல்
பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூல் அள்ளிய நிலையில், அதன் இரண்டாம் பாகம் நிச்சயம் அதை விட டபுள் மடங்காக வசூல் செய்யும் என நினைக்கிறேன். அதையே எங்கள் குழுவும் ரசிகர்களாகிய நீங்களும் விரும்புறீங்க என தனது பாணியில் செம ஜாலியாக பேசிய பார்த்திபனிடம் விருது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எல்லா நல்ல படங்களுக்கும் விருதுகள் கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.


Click it and Unblock the Notifications











