கான்ஸ் திரைப்பட விழாவில் 'இரவின் நிழல்' - சோதனைகளைச் சாதனைகளாக்கும் பார்த்திபன்
சென்னை: 75-வது கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஆர்.பார்த்திபன் இயக்கியிருக்கும், 'இரவின் நிழல்' திரைப்படம் திரையிடப்படவிருக்கிறது.
இது குறித்த தகவலை இயக்குநர் பார்த்திபன் தனது சமூக ஊடகங்களில் மகிழ்ச்சியோடு பகிர்ந்திருக்கிறார்.
நாளை மே 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில் பிரான்ஸ் நாட்டில் இத்திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது.

சிங்கிள் ஷாட்டில் 100 நிமிடங்கள்
எதையும் புதுமையாக யோசித்து வித்தியாசமாக செய்யக்கூடியவர் இயக்குநர், நடிகர் ஆர்.பார்த்திபன். அந்த வகையில், கடந்த ஆண்டு அவர் இயக்கிய 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம், தேசிய விருதையும், சர்வதேச அளவில் பல விருதுகளையும், பாராட்டுகளையும் குவித்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு புதுமையான முயற்சியாகத் தற்போது 'இரவின் நிழல்' என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். சுமார் 100 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அதேவேளையில், Non Linear முறையில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படமாகும். இவ்வளவு கடின முயற்சிகளை மேற்கொண்ட பார்த்திபனுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. இத்திரைப்படத்தைப் பார்த்த கான்ஸ் குழு, முதலில் இது ஒரு சிங்கிள் ஷாட் பிலிம் என்பதை நம்ப மறுத்தது. இதனை அண்மையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பகிர்ந்து கொண்டார். என்றாலும் தற்போது சோதனைகளைக் கடந்து இத்திரைப்படம் கான்ஸ் விழாவில் திரையிடவிருப்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப ரீதியில் மிகவும் புதுமையான முயற்சியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படமும் உலக அளவில் பல சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை
'இரவின் நிழல்' திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அண்மையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் இத்திரைப்படம் குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், இத்திரைப்படம் யூரோ மற்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருந்தால் உலகமே கொண்டாடியிருக்கும் எனப் பாராட்டினார். மேலும், இத்திரைப்படத்திற்காக அவர் இசையமைத்திருக்கும், 'மாயவா, தூயவா' என்ற பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

பார்த்திபனின் ஆஸ்கர் கனவு
ஒவ்வொரு சினிமா கலைஞனுக்கும் ஆஸ்கர் விருது என்பது மிகப் பெரிய கனவு. அந்தக் கனவை நோக்கி பல கலைஞர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்கர் என்பது இயக்குநர் பார்த்திபனுக்கும் மிகப் பெரிய கனவாக இருந்து வருகின்றது. தனது ஒவ்வொரு படைப்பையும் ஆஸ்கரைக் குறி வைத்தே அவர் உருவாக்கி வருகின்றார். என்றாலும் அவருக்கு ஆஸ்கர் என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. இந்நிலையில், 'இரவின் நிழல்' திரைப்படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற 3 கலைஞர்களோடு பார்த்திபன் இணைந்திருக்கிறார். முதலில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானோடு, சிறந்த இசை வடிவமைப்புக்காக ஆஸ்கர் விருது வென்ற கிரைக் மான் மற்றும் சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற கட்டா லங்கோ லியோன் ஆகியோரும் 'இரவின் நிழல்' படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். ஆகவே, 'இரவின் நிழல்' திரைப்படம் பார்த்திபனின் ஆஸ்கார் கனவை நிறைவேற்றலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கான்ஸ் விழாவில் கோலிவுட்
பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கும் 75-வது சர்வதேச கான்ஸ் திரைப்பட விழாவில், மாதவன், நயன்தாரா, பூஜா ஹெக்டே, பா.ரஞ்சித் உட்பட கோலிவுட்டைச் சேர்ந்த பல கலைஞர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். மேலும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் முதல்பார்வை, உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு, நடிகர் மாதவனின், 'ராக்கெட்டரி' உலக பிரிமியர் ரிலீஸ் என இவ்வாண்டு கான்ஸ் விழா களைகட்டப் போகிறது.


Click it and Unblock the Notifications











