பொங்கல் ரிலீஸ் போகி ஆகிடுச்சு - பராசக்தியை சொல்றாரா பார்த்திபன்?.. இப்படி அடிச்சிட்டாரே
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியானது. பெரிய ஹைப் படத்துக்கு இருந்த சூழலில்; சுமாரான வரவேற்பையே பெற்றது. ஆனால் திடீரென பொங்கல் ரேஸுக்கு வந்த ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி விழாவில் பார்த்திபன் பேசியிருக்கும் விஷயம் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சுதா கொங்கராவுடன் சிவகார்த்திகேயன் கூட்டணி வைத்த படம் பராசக்தி. இதில் அவருடன் ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா, பிருத்வி, சேத்தன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். தமிழ்நாட்டில் 60களில் நடந்த ஹிந்தி திணிப்புக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருந்தார் இயக்குநர். படத்தின் அவுட் லைனே இதன் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் எகிற வைத்திருந்தது.
சுமாரான வரவேற்புதான்: எப்படியும் கோலிவுட்டில் தரமான சம்பவத்தை இப்படம் செய்யும் என்ற ஆர்வத்துடன் ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. மெகா ஹிட்டாகியிருக்க வேண்டிய படத்தை சுதா கொங்கரா தன்னுடைய சில தவறுகளால், அலட்சியங்களால் சுமார் ஹிட்டாக மாற்றிவிட்டார் என விமர்சனம் எழுந்தது. அதேசமயம் படமானது நூறு கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் அறிவித்தது.

வெளியேறிய ஜனநாயகன்: முதலில் பராசக்திக்கு போட்டியாக ஜனநாயகன் வருவதாக இருந்தது. சென்சார் பிரச்னையால் அப்படம் ரேஸிலிருந்து வெளியேற; 14ஆம் தேதி வா வாத்தியார் படமும், 15ஆம் தேதி ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படமும் வந்தன. ஜீவாவுக்கு ஒரு தரமான வெற்றி கிடைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன. பராசக்தி ரிலீஸாகி ஐந்தே நாட்களில் TTT படம் வந்ததால் எப்படியும் பெரிய வெற்றியை பெறாது என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது.
சர்ப்ரைஸ் கொடுத்த TTT: ஆனால் அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தலைவர் தம்பி தலைமையில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. பராசக்தி சுமார் வரவேற்பு, வா வாத்தியார் மோசமான வரவேற்பை பெற்றதால் ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் இந்தப் படத்துக்கு படையெடுத்தது. நீண்ட வருடங்கள் கழித்து தனக்கு ஒரு வெற்றி கிடைத்திருப்பதால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஜீவா. இந்நிலையில் அப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
பார்த்திபன் பேச்சு: அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசுகையில், "பொங்கல் ரிலீஸில் பல படங்கள் போகி ஆகிவிடும். சில படங்கள் வெண் பொங்கல் ஆகிவிடும். அந்த வரிசையில் சர்க்கரை பொங்கல் என்பது இந்த தலைவர் தம்பி தலைமையில் மட்டும்தான். இந்த படம் வெற்றி பெற காரணமாக இயக்குநர் நிதிஷுக்கு வாழ்த்துகள். நிறைய திறமை இருந்தும் வெற்றி கிடைக்கவில்லையே என்று நினைக்கும் நடிகர்களில் ஜீவாவும் ஒருவர். அவரது இந்த வெற்றி என்னுடைய வெற்றி போல் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











