தனுஷ் - நயன்தாரா மோதல்.. ரொம்பவே சுவாரஸ்யம்.. அதை ரசிக்கிறேன்.. நானும் ரௌடிதான் நடிகர் பகீர்
சென்னை: கோலிவுட்டில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட பரபரப்புகளில் முக்கியமான ஒன்று தனுஷ் - நயன்தாரா மோதல். Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப் படத்துக்கு நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜை தருவதற்கு தனுஷ் மறுக்க; மூன்று நொடி வீடியோவை அதன் ட்ரெய்லரில் வைத்துவிட்டார்கள். அதனையடுத்து தயாரிப்பாளர் என்ற முறையில் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தனுஷ். அதனையடுத்து நயன் கொந்தளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.
நானும் ரௌடிதான் படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். விக்னேஷ் சிவன் படத்தை இயக்க விஜய் சேதுபதி ஹீரோவாகவும், நயன்தாரா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்தப் படத்தின்போதுதான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு வாடகை தாயை வைத்து இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டார்கள். இப்போது இரண்டு பேரும் தங்களது கரியரில் பிஸியாக இருக்கிறார்கள்.

Nayanthara Beyond The Fairy Tale: சூழல் இப்படி இருக்க நயன்தாராவின் திருமண காட்சிகள் மற்றும் அவர் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களை தொகுத்து Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப் படம் உருவானது. அதில் நானும் ரௌடிதான் படத்தின் ஃபுட்டேஜை பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அவர் அதற்கான NOC தரவில்லை. இதனையடுத்து அந்த ஆவணப் படத்தின் ட்ரெய்லரில் மூன்று நொடி காட்சிகள் பயன்படுத்தப்பட்டன.
நயன் காட்டம்: இதனை எதிர்பார்க்காத தனுஷ்; தன்னுடைய அனுமதியின்றி ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டதால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் கொதிப்படைந்த நயன்; தனுஷை கடுமையாக விமர்சனம் செய்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தனுஷ் தனது தந்தை, அண்ணனின் துணையோடுதான் சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்திருக்கிறார் என்கிற தொனியில் பல விஷயங்கள் இருந்தன.
37 நொடிகள்: இந்த விவகாரம் பூதாகரமான சூழலில்; நயனின் பிறந்தநாளான கடந்த 18ஆம் தேதி அந்த ஆவணப் படம் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமானது. அதில் கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஃபுட்டேஜுகள் இடம்பெற்றிருந்தன. அது மேலும் இந்த விஷயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் இட்லி கடை படத்தின் தயாரிப்பாளர் திருமணம் நடந்தது. அதில் தனுஷும், நயனும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தார்கள். அதுவும் பேசுபொருளானது.
பார்த்திபன் பேட்டி: இந்நிலையில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்த இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதுகுறித்து அவரிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தனுஷ் - நயன்தாரா மோதல் இந்திய கிரிக்கெட் மேட்ச் மாதிரி சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனை நான் பார்வையாளனாக இருந்து ரசிக்கிறேன்" என்றார்.
முன்னதாக நயன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமின்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான் திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.
திருத்தம்: 'Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.
அனைவருக்கும் புரியும்: நானும் ரௌடிதான்' திரைப்படத்தின் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம், இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால், அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும்,
வெறுப்பு: தடையில்லா சான்றிதழ் (NOC) மறுக்கப்பட்டது வியாபார ரீதியானதாகவோ அல்லது சட்ட ரீதியானதாகவோ இருந்தால் நிச்சயமாக அதனை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், முழுக்க முழுக்க என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என ஏகப்பட்ட விஷயங்களை அவர் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











