இளையராஜாவின் சாதனைகள் என்னன்னு தெரியுமா?.. அவரை விமர்சிக்கவே கூடாது.. பார்த்திபன் கொந்தளிப்பு
சென்னை: இளையராஜாவுக்கென்று ஒட்டுமொத்த தமிழர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக இந்த வயதிலும் அவர் இசையமைத்துவருகிறார். அந்தவகையில் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அந்தப் படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜா பற்றி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
இளையராஜாவின் இசையமைப்பில் கடைசியாக ஜமா திரைப்படம் வெளியானது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் சிம்பொனி இசை ஒன்றையும் முடித்திருக்கிறார். இப்படி படு பிஸியாக இருக்கும் இளையராஜா இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார். அங்கிருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் அவர் செல்ல முனையும்போது அங்கிருந்த ஜீயர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.

வலுக்கும் கண்டனம்: இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் சொத்துக்களில் ஒருவரான இளையராஜாவை இப்படி அவமானப்படுத்தியிருக்கக்கூடாது என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து குரல்கள் எழுப்ப தொடங்கியிருக்கின்றன. அதுமட்டுமின்றி இனியாவது இளையராஜா இந்த மாதிரியான இடங்களுக்கு செல்லக்கூடாது என்றும் தங்களது கமெண்ட்ஸ்களை தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். இந்தச் சூழலில் இளையராஜா பற்றி இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பார்த்திபன் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இசைஞானி இளையராஜாவை யாரும் விமர்சிக்கக்கூடாது என்பதுதான் என்னுடைய முதல் விருப்பம். அவர் செய்த சாதனைகளை எல்லாம் நானோ அல்லது வேறு யாராவது செய்திருந்தாலோ தலைகீழாகத்தான் நடந்திருப்போம். அவர் எவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறார். ஆனால் அவர் அவ்வளவையும் செய்துவிட்டு அடக்கமாக இருகிறார். அவர் தலைகனத்தோடு இருக்கிறார் என்று பலர் சொல்கிறார்கள்.
அதெல்லாம் தெரியாது: ஆனால் அதெல்லாம் அவர்களின் சிந்தனை. ராஜாவுக்கு கவர்ச்சியாக பேசி சபையில் இருப்பவர்களை கவர தெரியாது. அதுதான் அவரிடம் இருக்கும் பிரச்னை. எல்லோரும் காப்பி அடிச்சு இசையமைக்கிறார்கள். நான் அந்த மாதிரி செய்வது கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதேபோல் ஆஸ்கர் விருது வாங்கிய மரகதமணியிடம், உங்களிடம் வந்து ஒரு இயக்குநர் ஒரு ட்யூன் வேண்டுமென்று கேட்கும்போது என்னுடைய பாடலை காண்பித்து கேட்பார். ஆனால் என்னிடம் வந்து கேட்பவர்கள் யாருடைய பாடலை உதாரணமாக சொல்வார்கள் என்று கேட்டார்.
இசை மட்டும்தான்: அதை கேட்ட மரகதமணி இளையராஜாவை பார்த்துக்கொண்டே இருக்கிறார். ராஜாவை பொறுத்தவரை மற்றவர்களிடம் பேசி எப்படி ஐஸ் வைக்க வேண்டும் என்று தெரியாது. அவருக்கு தெரிந்தது எல்லாம் இசை மட்டும்தான். ஆடி ஆத்தாடி இள மனசொன்னு என்று பாட்டு வேண்டும் என பாரதிராஜாவாகவா கேட்டார். அதை நான் போட்டேன். நீங்கள் என்னிடம் கேட்டுக்கொண்டு வரும் இசை எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருப்பதுதான். நீங்கள் புதிதாக என்னிடம் என்ன கேட்கிறீர்கள் அதை மட்டும் சொல்லுங்கள் என்று எப்போதும் அவர் சொல்வார். அதை நான் ரொம்ப ரசிப்பேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











