முதல்வராய் இன்று.. முதல் வாழ்த்தாய் அன்றே.. தேசிய விருது விழாவை ஞாபகப்படுத்துறாரோ பார்த்திபன்?
சென்னை: ஒத்த செருப்பு படத்திற்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் பார்த்திபனை கடந்த மார்ச் மாதமே மு.க. ஸ்டாலின் வாழ்த்தி இருந்தார்.
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அப்போதே முதல் ஆளாய் வாழ்த்தியமைக்கு நன்றி என தற்போது திடீரென நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மே மாதம் தேசிய விருதுகள் வழங்கப்படும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதனை நினைவுப்படுத்துகிறாரா? என்கிற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

தேசிய விருது
2019ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவில் அசுரன், சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களும் அதில் நடித்த நடிகர்களும் தேசிய விருதுக்கு தேர்வாகினர். சிறந்த நடிகருக்கான விருது நடிகர் தனுஷுக்கும் சிறப்பு விருது விஜய் சேதுபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வாசம் படத்தில் சிறப்பாக இசையைமைத்த இமானுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து
கடந்த மாதம் மார்ச் 23ம் தேதி மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய விருது பெறும் தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன் மற்றும் இமான் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அசுரன் வெற்றிமாறனுக்கு அன்புநிறை வாழ்த்துகள்! அர்ப்பணிப்புடன் - முழுமையான உழைப்பைச் செலுத்துகிறவர்களுக்கு விருது; மகிழ்கிறேன்!" என ட்வீட் போட்டு வாழ்த்தி இருந்தார்.

பார்த்திபன் நன்றி
அந்த ட்வீட்டை டேக் செய்து தற்போது நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வராய் இன்று.. முதல் வாழ்த்தாய் அன்றே.. நன்றி!" என பதிவிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தனது நன்றியை தற்போது தெரிவித்துள்ளார்.

ஞாபகப்படுத்துறாரோ
தேசிய விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், மே மாதம் அதன் விருது விழா நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்த முடியாத சூழலில் தமிழக கலைஞர்களின் தேசிய விருது குறித்து முதல்வருக்கு பார்த்திபன் ஞாபகப்படுத்துகிறாரோ என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











