Vijay Antony: ஈவு இரக்கமற்ற ஒரு கயிறு அவர் ஈன்ற உயிரை.. விஜய் ஆண்டனிக்கு பார்த்திபன் ஆறுதல்
சென்னை: Vijay Antony and Parthiban - விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், நடிகர் பார்த்திபன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தார்.
இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது மகளின் மறைவு குறித்து வெளியிட்ட பதிவுக்கு ஆறுதல் கூறும் வகையில், பார்த்திபன் வெளியிட்டுள்ள புதிய ட்விட்டர் பதிவு ரசிகர்கள் நெஞ்சை உலுக்கி வருகிறது.

நானும் இறந்து விட்டேன்: மகள் மீராவின் மறைவு விஜய் ஆண்டனியை ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுத்துள்ளது. கதறிக்கூட அழ முடியாத அளவுக்கு மனதளவில் உடைந்து போயுள்ளார் விஜய் ஆண்டனி என தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்து இருந்தார்.
மகளின் மறைவுக்கு பின்னர் முதன் முறையாக தனது சமூக வலைதள பக்கத்தில் அதுகுறித்து பதிவிட்ட விஜய் ஆண்டனி, "அன்பு நெஞ்சங்களே, என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள்." "அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்" என பதிவிட்டு இருந்தார்.
பார்த்திபன் ஆதரவு: இந்நிலையில், நானே இறந்து விட்டேன் என விஜய் ஆண்டனி பேசியது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
"ஈவு இரக்கமற்ற ஒரு கயிறு அவர்
ஈன்ற உயிரை பறித்து விட்டதோ இல்லையோ-அவர்
கடிதம் என் உயிரை உலுக்கிவிட்டது.குறிப்பாக
"என் மகளுடன் நானும் இறந்துவிட்டேன்"என்ற
அந்த ஒற்றை வரி ...
அவரின் சோகத்தை என்னுள் கடத்தி விட்டது.
இப்படி அவர் தன்னை தானே பக்குவமாக தத்துவமாக சமாதானப் படுத்திக் கொண்டாளே தவிர,தேவனே நேரில் வந்து ஆறுதல் சொன்னாலும் தீராதிந்த சோகம்.
பூவொன்றினையே பூமிக்குள் புதைத்துவிட்டு அக்கல்லறை மீது மீண்டும் பூக்களையே தூவுகையில்
என் இதயமும் தூள் தூளாகி அந்த பூக்களுக்கிடையே சிக்கிக் கொண்டது.
யாரோ நான்...
என் மனமே இன்னும்
அம்மயானத்தோடு மயானமாய்
உறைந்து கிடக்கையில்,
பெற்றவர்களின் மனம்?
விஜய் ஆண்டனி தன் மகளின் பெயரில் செய்யப்போகும் நற்காரியங்களில்
தோள் கொடுப்போம்.
வேறென்னச் சொல்லி
நம்மை நாம் சமாதானப்படுத்திக் கொள்வது?" என கவிதை வடிவில் தனது ஆறுதலை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











