காடாளும் காடன் நானே.. வெளியானது பருந்தாகுது ஊர்க்குருவி படத்தின் லிரிக் வீடியோ!
சென்னை : நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா இருவரும் இணைந்து லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பருந்தாகுது ஊர்க்குருவி.
இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கோ தனபாலன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.
முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

நடிகர்கள் நிஷாந்த் ரூசோ, விவேக் பிரசன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் பருந்தாகுது ஊர்க்குருவி. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய கோ. தனபாலன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அடர்ந்த காட்டிற்குள் ஒரே நாளில் நடக்கும் கதையாக இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. சர்வைவல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மதயானைக் கூட்டமோ என்ற அந்தப் பாடலை ராகுல் நம்பியார், ரஞ்சித் உன்னி இணைந்து பாடியுள்ளனர். மிகவும் பரபரப்பான அளவில் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. காயத்ரி ஐயர் இந்தப் படத்தின் நாயகியாக இணைந்துள்ளார். மேலும் படத்தில் ராட்சசன் வினோத் சாகர், அருள் ஷங்கர், கோடங்கி வடிவேலு ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் இருவர், ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு, எப்படி உயிர் பிழைக்கிறார்கள் என்பதை மையமாக கொண்டு படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. வஞ்சகமும் சூழ்ச்சியும் ஒருபோதும் நிலைக்காது என்பதையும் இந்தப் படம் முக்கிய தீமாக கொண்டு உருவாகியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக படத்தின் இயக்குநர் தனபாலன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
படத்தின் அதிகாரப்பூர்வ ஷார்ட் வீடியோ பார்ட்னராக ஜோஷ் ஆப் உள்ளது. இந்த ஆப்பின் மூலமாக பயனாளிகள் தங்களின் தனித்திறமையை வீடியோவாக எடுத்து பதிவிடலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் பல்வேறு போட்டிகளையும் இந்த ஆப் செயல்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் இதில் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











