இடதுசாரி முன்னணி சார்பில்.. தேர்தலில் போட்டியிடப் போகிறாரா..? நடிகை பூ பார்வதி திடீர் விளக்கம்!
கொச்சி: அரசியல் கட்சியில் சேர இருப்பதாக வந்த தகவல் பற்றி பிரபல நடிகை பூ பார்வதி விளக்கம் அளித்துள்ளார்.
சசி இயக்கிய பூ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை பார்வதி திருவோத்து.

தொடர்ந்து வாய்ப்பு
முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட இவர், அடுத்து பூ பார்வதி என்றே அறியப்படுகிறார். இந்தப் படத்தை அடுத்து அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. தனுஷூடன் மரியான், கமலுடன் உத்தமவில்லன், ஆர்யா, ராணா நடித்த பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்தார்.

ரிவைசிங் கமிட்டி
இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார் பார்வதி. இந்தியில், கரிப் கரிப் சிங்கிள் என்ற படத்தில் இர்பான் கானுடன் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் நடித்த வர்த்தமணம் படம் சர்ச்சைக்குள்ளானது. சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ரிவைசிங் கமிட்டி சென்று சான்றிதழ் பெற்றனர்.

ஜனநாயக முன்னணி
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து விலகினார். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், வர இருக்கும் கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகை பார்வதி, இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) சார்பில் போட்டியிட இருப்பதாக செய்திகள் வெளியானது.

நடிகர் முகேஷ்
இந்தக் கூட்டணி சார்பில் ஏற்கனவே மலையாள நடிகர்கள் முகேஷ், கணேஷ்குமார் ஆகியோர் போட்டியிட உள்ள நிலையில், இவரும் போட்டியிட இருப்பதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவர் தெரிவித்திருந்த கருத்து பரபரப்பாகப் பேசப்பட்டது.

அழைப்பு வரவில்லை
இந்நிலையில் நடிகை பார்வதி, தான் போட்டியிடப் போவதாக வந்த செய்தியை மறுத்துள்ளார். எந்தக் கட்சியில் இருந்தும் தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் நடிகையாகவே தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் நடிகர், நடிகைகளை களத்தில் இழுக்க, அரசியல் கட்சிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.


Click it and Unblock the Notifications











