நடிகர் திலீப் விடுதலை.. இது தான் நீதியா? கொந்தளித்த நடிகைகள்!
சென்னை: நடிகையை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வெளியிட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மலையாள திரைப்பட நடிகர் திலீப்பை, நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு வெளியானதும், பார்வதி திருவோத்து, சின்மயி ஸ்ரீபாதா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
2017-ஆம் ஆண்டு நடிகையின் காரை வழிமறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், அதே காரில் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் முக்கிய கதாநாயகியாக வலம்வந்த நடிகைக்கு நேர்ந்த இந்த கொடுமைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் முதல் நபராக நடிகையின் முன்னாள் ஓட்டுநர் உட்பட 6 பேரை போலீசார் சைது செய்து 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கு மூளையாக செயல்பட்டது திலீப் தான் என்பது தெரியவந்ததை அடுத்து, ஜூலை 10, 2017 அன்று நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 45 நாட்களுக்கு பின் திலீப் ஜாமீனில் வெளியே வந்தார்.

மலையாள நடிகர் திலீப்: இந்த வழக்கு விசாரணையின் போது 261 சாட்சிகளை, அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. இதில், மலையாள திரையுலகைச் சேர்ந்த பலர் பிரபலங்களும் அடங்குவர். இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றம் நியமித்த அதிகாரியின் விசாரணை 109 நாட்கள் வரை நீடித்தது. 2017 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்த வழக்கு பல திருப்பங்களை கடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரும் குற்றவாளிகள் என எர்ணாகுளம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
என்ன ஒரு கேலிக்குத்து: நடிகர் திலீப்பின் விடுதலையை அடுத்து, நடிகை பார்வதி திருவோத்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி உள்ளார். இது தான் நீதியா... இது அருவருப்பானது, பாதிக்கப்பட்டவர் ஏழு ஆண்டுகளாகப் போராடி வருகிறார். என்ன ஒரு கேலிக்குத்து என்று அவர் பதிவிட்டு எனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் எதிர்ப்பு: நடிகை ரேவதி, தனது பதிவில், எங்கள் நீதி அமைப்பு தொடர்ந்து தோல்வியடைகிறது என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த வழக்கு ஏழு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது, பாதிக்கப்பட்டவர் தொடர்ந்து நீதிக்காகப் போராடி வருகிறார். இந்தத் தீர்ப்பு மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் அவர் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார். நடிகை ரீமா கல்லிங்கல் தனது இன்ஸ்டாகிராமில், ஒரு அறிக்கையைப் பகிர்ந்து, "இல்லை இல்லை இல்லை இல்லை" என்று கோபமான ஈமோஜியுடன் தனது எதிர்ப்பைப் பதிவிட்டுள்ளார். நடிகை அன்ன பென், கனி குஸ்ருதி, திவ்யா கோபிநாத், உன்னி ஆர். போன்ற பல நடிகைகளும், பாடகி சின்மயி, எழுத்தாளர்களும் இத்தீர்ப்புக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











