பசங்க கிஷோருக்கு முடிந்தது திருமணம்.. சீரியல் நடிகையை கரம் பிடித்தார்
சென்னை: பசங்க படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை திருமணம் செய்திருக்கிறார்.
சசிக்குமாரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் இயக்குநர் பாண்டிராஜ். இவர் பசங்க திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தை பாண்டிராஜின் குருநாதரான சசிக்குமார் தயாரித்திருந்தார்.

மெகா ஹிட்டான பசங்க திரைப்படம்
பசங்க திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியானது. நடிகர் விமலுக்கும் இதுதான் முதல் படமாகும். இதில் விமலுடன் வேகா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சிறுவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இதில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் கிஷோரும், ஜீவா நித்தியானந்தம் கதாபாத்திரத்தில் ஸ்ரீராமும், பக்கடா கதாபாத்திரத்தில் பாண்டியனும் நடித்திருந்தனர். முதல்முறையாக சிறுவர்களையும், அவர்களுக்குள் நடக்கும் பிரச்னைகளையும் வைத்து உருவாகியிருந்ததால் படம் மெகா ஹிட்டானது.

விருதுகளை அள்ளிய பசங்க திரைப்படம்
படம் விமர்சன ரீதியாகவும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி விருதுகளையும் குவித்தது. அதன்படி சிறந்த வசனம், சிறந்த ஃபியூச்சர் பிலிம் பிரிவுகளில் தேசிய விருதை பெற்றது. கிஷோர் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றார். மேலும் தமிழ்நாடு அரசின் மாநில விருதுகளும் இந்தப் படத்துக்கு கிடைத்தது. இந்தப் படத்தின் மூலம் இயக்குநரும், படத்தில் நடித்தவர்களும் பிரபலமாகினர்.

தமிழ் சினிமாவில் பிரபலமான கிஷோர்
முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பின் மூலம் தேசிய விருது வென்று அசத்திய கிஷோர் அடுத்ததாக துரோகி, கோலிசோடா உள்ளிட்ட படங்களில் நடித்தார். கோலிசோடா படத்தில் ஸ்ரீராம், பாண்டியன் உள்ளிட்டோரும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலித்துவந்தார். ப்ரீத்தி குமார் கிஷோரைவிட வயதில் மூத்தவர் ஆவார்.

முடிந்தது கிஷோர் - ப்ரீத்தி குமார் திருமணம்
இருவரும் காதலித்துவந்த சூழலில் இவர்களது திருமணம் இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் நண்பர்களும், உறவினர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். இதுதொடர்பாக ப்ரீத்தி குமார் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், கிஷோரின் கைகளை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "கதை தொடங்குகிறது. Married" என குறிப்பிட்டுள்ளார். இந்த புதுமணத் தம்பதிகளுக்கு சின்னத்திரை நடிகர்களும்,நண்பர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

சின்னத்திரையில் பிரபலமான ப்ரீத்தி குமார்
வானத்தைப் போல என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ப்ரீத்தி குமார். இவர் மேலும், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட பிரபலமான தமிழ் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது ஈரமான ரோஜாவே சீசன் 2இல் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











