அய்யோ என்னால தாங்க முடியல.. மகனே அம்மாவை அழைச்சுக்கிட்டார்.. பாடகி சுஜாதா கண்ணீர் அஞ்சலி!
சென்னை: மைசூருவில் காலமான பாடகி எஸ். ஜானகி அம்மா அவர்களின் மறைவுக்குப் பல்வேறு மாநில அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் என ஒட்டுமொத்த இசைத்துறையினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, ஜானகி அம்மாவின் உடல் மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தி வைக்கப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
ஜானகி அம்மாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரபல பின்னணிப் பாடகி சுஜாதா, செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கப் பேசினார். ஜானகி அம்மாள் மறைந்த செய்தியை என்னுடைய மகள் சொன்னதும் அப்படியே நான் துடிதுடித்துப் போனேன். அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் இன்னும் மீளவே முடியவில்லை. இரண்டு மாதத்திற்கு முன்புதான் நாங்கள் மைசூருக்கு நேரில் வந்து ஜானகி அம்மாவைச் சந்தித்தோம். அன்று காலையில் இருந்து மாலை வரை அவரோடு அமர்ந்து பல பழைய விஷயங்களைப் பேசி மகிழ்ந்தோம். இந்த வயதிலும் அவர் தான் பாடிய பாடல்களின் ஒவ்வொரு சந்ததியையும் அப்படியே மறக்காமல் நினைவில் வைத்திருந்தார்.

மகனே அழைத்துக் கொண்டார்: அவருடைய மகன் முரளி கிருஷ்ணனின் நினைவாக டிசம்பர் மாதம் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக சொன்னார். அதற்காக ஜானகி அம்மாள் மிகத் தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருந்தார். அந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் என்னென்ன பாடல்களைப் பாட வேண்டும் என்று பட்டியலையெல்லாம் தயார் செய்து வைத்திருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சி நடப்பதற்குள் அவருடைய மகனே அம்மாவைத் தன்னிடம் அழைத்துக் கொண்டார் என நினைக்கும் போது நெஞ்சம் மிகவும் வேதனையாக இருக்கிறது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை எனப் பாடகி சுஜாதா கண் கலங்கியபடி பேட்டி அளித்துள்ளார்.
மகன் மறைந்த சோகம்: பாடகி ஜானகியின் ஒரே மகனான முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதம் தனது 65வது வயதில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகன் மறைந்த துயரத்தில் இருந்த எஸ் ஜானகி, குடும்பத்துடன் மைசூரில் வசித்து வந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். மகாராஜா கல்லூரி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நீண்ட வரிசையில் காத்திருந்து பொது மக்கள் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications