அசுரன் விழாவில் 'குருவி' பேச்சு... விளாசியத் தள்ளிய ரசிகர்கள்... விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட பவன்
சென்னை: விஜய்யின் குருவி படம் பற்றிய தனது பேச்சுக்கு நடிகர் பவன், மன்னிப்புக் கேட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம், அசுரன். கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார்.
பூமணியின் வெக்கை நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. நூறு கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படம் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

நூறாவது நாள் விழா
இதன் நூறாவது நாள் விழா, கடந்த திங்கட்கிழமை சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் நடந்தது. இதில், படத்தின் இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கிண்டலாக
படத்தில் நடித்த, பணியாற்றிய பலரும் இந்த விழாவில் பேசினர். அப்போது பேசிய நடிகர் பவன், விஜய் நடித்த குருவி படத்தின் 150 நாள் வெற்றி விழா குறித்து கிண்டலாகப் பேசினார்.

அரிதான ஒன்று
அவர் பேசும்போது, 'இந்தப் படத்தில் நான் நடித்தது பெருமையாக உள்ளது. தமிழ் சினிமாவில் படங்கள், நூறு நாட்கள் வெற்றிகரமாக ஓடுவது என்பது இப்போது அரிதான ஒன்று. கடைசியாக நான் நடித்த குருவி படம், 150 நாட்கள் ஓடியது என்று வெற்றி விழா நடத்தினார்கள்.

எந்தளவு உண்மை
நான் சென்றிருந்தேன். ஆனால், அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார். அவர் பேச்சை கேட்டு அரங்கம் சிரித்தது. பின்னர் பேசிய நடிகர் தனுஷ், அதை சமாளித்தார்.

கடுமையான சாடல்
இதையடுத்து விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் பவனை கடுமையாகச் சாடினர். கண்டபடி விமர்சித்தனர். இந்நிலையில் நடிகர் பவன், குருவி படம் குறித்த தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

புண்படும்படி
அதில், விஜய் சாரிடமும், கம்பெனியிடமும், இயக்குனரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். யார் மனமும் புண்படும்படியாக நான் பேசவில்லை. நான் பொதுவாக நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டேன், அப்படி போனாலும் என்னை ஸ்டேஜூக்கு அழைக்காதீர்கள் என்று சொல்லிடுவேன். ஏனென்றால், நான் தெரியாமல் எதையாவது பேசிவிடுவேன் என்று கூறியுள்ளார் பவன்.


Click it and Unblock the Notifications











