முதலில் 3 பேர்.. அடுத்து 5 பேர்.. பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மொத்தம் 8 பேர் பலி
ஹைதராபாத்: நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கு கொண்ட 8 ரசிகர்கள் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு அருகே பிளெக்ஸ் வைக்க சென்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியாகினர். 3 ரசிகர்கள் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், மேலும், 5 ரசிகர்கள் வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி வெளியாகி ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

3 பேர் பலி
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன் கல்யாணின் 49வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 25 அடி உயர பிளக்ஸ் வைப்பதற்காக நேற்று இரவு சென்ற சோமசேகர் (29), அருணாசலம்(20) மற்றும் ராஜேந்திரன்(31) ஆகிய மூன்று ரசிகர்கள் பிளக்ஸில் உள்ள இரும்பு கம்பியுடன் மின் கம்பி உரசியதால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி
மேலும் 3 ரசிகர்கள் காயம் காரணமாக சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த 3 ரசிகர்கள் குடும்பத்துக்கும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பவன் கல்யாண் தரப்பு அறிவித்தது. மேலும், நடிகர் ராம் சரண் உயிரிழந்த ரசிகர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

வாகன விபத்து
3 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், பிறந்தநாள் அதுவுமா பெரும் சோகத்தில் ஆழ்ந்த நடிகர் பவன் கல்யாணுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக, மேலும், 5 ரசிகர்கள் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். பவன் கல்யாணின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு வீடு திரும்பும் நிலையில், அவர்கள் வந்த கார் மணல் லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யார் யார்
வாரங்கல் மாவட்டத்தில் இருந்து ‘Mulugu' நோக்கி வந்த போது, அவர்கள் வந்த கார் எதிர்பாராமல் எதிரே வந்த மணல் லாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. எம். ராக்கேஷ், எம். ரோகித், நரேஷ், சபீர் மற்றும் ஜெய பிரகாஷ் ஆகிய 5 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அனைவரும் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்கிற தகவலை வாரங்கல் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி பவன் கல்யாண் ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











