பவன் கல்யாணுக்கு வெற்றி உறுதி.. பிதாபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்!
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த நிலையில், பிதாபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
லோக்சபா மற்றும் ஆந்திரப் பிரதேச சட்டசபை தேர்தல்களுக்காக பவன் கல்யாண் பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த சீட்-பகிர்வு ஒப்பந்தம், தெலுங்கு தேசம் கட்சிக்கு 144 சட்டமன்ற மற்றும் 17 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கியது, பாஜக ஆறு மக்களவை மற்றும் 10 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. பவன் கல்யாணின் ஜனசேனா இரண்டு மக்களவை மற்றும் 21 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது.

யார் இந்த பவன் கல்யாண்?: 55 வயதான பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ்பெற்ற தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் டோலிவுட் நடிகர்களான சிரஞ்சீவி மற்றும் நாகேந்திர பாபுவின் சகோதரர். தற்காப்பு கலைகளுக்கு பெயர் பெற்ற கல்யாண் கோகுலம்லோ சீதா (1997), குஷி (2001), மற்றும் வக்கீல் சாப் (2021) போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ்நாட்டில் அஜித்துக்கு இருக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் ஆந்திராவில் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
2008ல் அரசியலில் நுழைந்த பவன் கல்யாண், யுவராஜ்யம் என்ற பிரஜா ராஜ்யம் கட்சியின் இளைஞர் பிரிவை வழிநடத்தினார். அவரது சகோதரர் சிரஞ்சீவி தொடங்கிய கட்சியின் தலைவராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டார். ஆனால், ஆரம்பத்தில் எடுத்த உடனே அரசியலில் இவரால் ஜொலிக்க முடியவில்லை. ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்து தான் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுச்சி கண்டு வருகிறார்.
அரசியல் மறுபிரவேசம்: பவன் கல்யாண் 2014ல் ஜன சேனா கட்சி (JSP) என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2019ல், தேர்தலில் போட்டியிடும் அவரது முதல் முயற்சி ஏமாற்றத்தையே சந்தித்தது. கஜுவாகா மற்றும் பீமாவரம் தொகுதிகளில் போட்டியிட்ட அவர் இரண்டிலும் தோல்வியடைந்தார்.
தேர்தல் வாக்குறுதிகள்: ஏப்ரல் 30 அன்று, ஜன சேனா கட்சி தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து பல வாக்குறுதிகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், 18-59 வயதுடைய பெண்களுக்கு மாதாந்திர நிதியுதவி ரூ.1,500 உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வேலையின்மை உதவித்தொகை மாதம் 3,000 ரூபாய் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'தள்ளிகி வந்தனம்' திட்டத்தின் மூலம் பள்ளி செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.15,000 வழங்குவதாக உறுதியளித்தனர்.
பிதாபுரத்தின் விவசாயத் தன்மையைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்காகப் பல திட்டங்களை முன்வைத்தனர். கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ.20,000 நிதியுதவி, ஒன்பது மணி நேரம் தடையில்லா மின்சாரம், இலவச சோலார் பம்ப் செட் ஆகியவை இதில் அடங்கும்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்: பிதாபுரத்தில் போட்டியிட்ட பவன் கல்யாண் வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெகன் மோகன் ரெட்டியின் சார்பாக அந்த தொகுதியில் போட்டியிட்ட வங்கா கீதா விஸ்வநாதம் என்பவரை பின்னுக்குத்தள்ளி முன்னிலையில் உள்ளார். நிச்சயம் பவன் கல்யாண் தான் வெற்றிப் பெறுவார் என #PawanKalyan ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். பவன் கல்யாண், பிரியங்கா மோகன் நடித்துள்ள ஓஜி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாக காத்திருக்கிறது. ஹரிஹர வீர மல்லு படமும் உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











