சிவகார்த்திகேயனை பார்த்ததும் கட்டியணைத்த பவன் கல்யாண்.. வேறலெவலில் வரவேற்பு கூடிட்டே போகுதே!
சென்னை: தமிழ் சினிமாவை தாண்டி டோலிவுட்டிலும் ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் படம் ரிலீசாவதை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவுக்கும் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் தான் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனை பார்த்ததுமே நடிகர் பவன் கல்யாண் ஓடி வந்து அவரை கட்டியணைத்து பேசிய வீடியோ டிரெண்டாகி வருகிறது.

பிரின்ஸ் சிவகார்த்திகேயன்
கோலிவுட்டில் டாக்டர், டான் என 100 கோடி நாயகனாக கலக்கி வரும் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக டோலிவுட் இயக்குநர் அனுதீப் கேவி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். உக்ரைன் நாட்டு அழகியை ஹீரோயினாக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசாக வெளியாகப் போகிறது என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

விஜய், தனுஷை தொடர்ந்து
நடிகர் விஜய் டோலிவுட் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். நடிகர் தனுஷ் டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். ஆனால், அவர்கள் இருவருக்கு முன்னதாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயகுநர் அனுதீப் கே.வி இயக்கத்தில் நடித்துள்ள பிரின்ஸ் வெளியாகப் போவது குறிப்பிடத்தக்கது. கோலிவுட் இயக்குநர்களை தாண்டி டோலிவுட்டில் அடுத்தடுத்து மூன்று முன்னணி நடிகர்கள் தங்களது மார்க்கெட்டை விரிவுப்படுத்தி வருகின்றனர்.

ஹைதராபாத் திருமணத்தில்
பிரின்ஸ் படத்தின் இறுதிகட்ட பணிகளுக்காக ஹைதராபாத், சென்னை என அடிக்கடி ட்ரிப் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரபலம் ஒருவரின் திருமணத்திலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அங்கே அவருக்கு டோலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை பார்த்த எஸ்கே ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்து வருகின்றனர்.
கட்டி அணைத்த பவன் கல்யாண்
அந்த திருமணத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த டோலிவுட் நடிகர் பவன் கல்யாண் ஓடி வந்து கட்டியணைத்து அவரை நலம் விசாரிக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு சினிமாவில் ரசிகர்களை மட்டுமின்றி தனது அன்பான அணுகுமுறையால் டோலிவுட் பிரபலங்களையும் கவர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில்
சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மன்மத லீலை எனும் குயிக்கி படத்தை இயக்கி வெளியிட்ட வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யாவின் படத்தை இயக்குகிறார். அதற்கு அடுத்து வரும் டிசம்பர் மாதம் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் படம் ஆரம்பமாகப் போகிறது என்றும் மாநாடு படத்தைப் போலவே அந்த படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது என்றும் கூறுகின்றனர். அயலான் படத்தின் ரிலீசுக்காகவும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











