இயக்குனர் மீதான பாலியல் புகார்.. ஹீரோயின் தொடர்ந்த அவதூறு வழக்கு.. பிரபல நடிகை திடீர் மன்னிப்பு!
மும்பை: பிரபல நடிகை தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் தான் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக நடிகை பாயல் கோஷ் தெரிவித்துள்ளார்.
தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப்.
இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.

பாலியல் வன்கொடுமை
இவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை பாயல் கோஷ் குற்றம் சாட்டி இருந்தார். இவர் தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் நடித்திருந்தவர். பாயல் கோஷின் புகாரை அனுராக் காஷ்யப் மறுத்திருந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்தார் பாயல் கோஷ்.

அனுராக் காஷ்யப்
போலீசார், அனுராக் காஷ்யப் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நாளில் இந்தியாவிலேயே இல்லை என்றும் இலங்கையில் இருந்ததாகவும் அனுராக் கூறினார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரிச்சா சதா
நடிகை பாயல் கோஷ், அனுராக் காஷ்யப் பற்றி புகார் கூறும்போது, ரிச்சா சதா, மஹி கில், நடிகை ஹூமா குரேஸி உள்பட சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த நடிகைகள், தங்கள் மீதான புகாரை மறுத்திருந்தனர். அதோடு, அனுராக் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறியிருந்தனர்.

அவதூறு வழக்கு
இந்நிலையில் நடிகை ரிச்சா சதா, பாயல் கோஷ் மீது ரூ.1.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மும்பை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.கே.மேனன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாயல் கோஷ் வழக்கறிஞர் நிதின் சத்புதே, ரிச்சா சதாவுக்கு எதிரான தனது கருத்தை பாயல் கோஷ் திரும்ப பெறுவதாக கூறினார்.

மன்னிப்பு கேட்கத் தயார்
'பாயல் தவறுதலாக அப்பாவித்தனமாக அப்படி பேசிவிட்டார். அவர் ரிச்சா சதாவை பின்பற்றுபவர். மேலும் அவரை மதிப்பவர். அவர் தனது கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார். அவரிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளார் என்றும் தெரிவித்தார்.

எனது போராட்டம்
இதையடுத்து ட்விட்டரில் தெரிவித்துள்ள பாயல் கோஷ், ரிச்சா சதாவுக்கு எதிரான நான் எதையும் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் பெண்களாகிய நாம் ஒருவருக்கொருவர் தோளோடு தோளாக நிற்கவேண்டும். எனது போராட்டம் அனுராக் காஷயப்புக்கு மட்டுமே எதிரானது. அதில்மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அவருடைய உண்மையான முகத்தை இந்த உலகம் காணப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











