பாலியல் விவகாரம்.. நீதிக்காக ஒவ்வொரு கதவையும் தட்டறேன்.. பிரபல நடிகை குடியரசு தலைவருக்கு கடிதம்!
மும்பை: பாலியல் விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்துள்ள பிரபல நடிகை, இப்போது குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நடிகை பாயல் கோஷ், இந்தி பட இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி இருந்தார்.
சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருந்தபோது வீட்டுக்கு வரவழைத்த அவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி இருந்தார்.

அப்படியே மறுப்பு
இதையடுத்து மும்பை வெர்சோவா போலீசில் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் புகார் கொடுத்தார். அவர் சொன்ன பாலியல் புகாரை, அப்படியே மறுத்திருந்தார் இயக்குனர் அனுராக் காஷ்யப். அவருக்கு ஆதரவாக நடிகர், நடிகைகளும், இயக்குனர்களும் கருத்துத் தெரிவித்தனர்.

ஏன் கைது செய்யவில்லை?
இந்நிலையில், அவரும் அவர் வழக்கறிஞரும், வெர்சோவா போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏன் அனுராக் காஷ்யபை இன்னும் கைது செய்யவில்லை என்று கேட்டனர். பின்னர் போலீசார் அனுராக் காஷ்யபுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். பாயல் கோஷ் குறிப்பிட்டுள்ள தேதியில் தான் இலங்கையில் இருந்ததாக் கூறியிருந்தார், அனுராக்.

உரிய நடவடிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்துப் பேசினார் பாயல் கோஷ். இதனால் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார் பாயல் கோஷ்.

ஏழை ஒருவரால்
அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு கொடூர குற்றத்தை செய்தவர் மீது மும்பை வெர்சாவோ போலீசில் புகார் செய்தேன். இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த குற்றம் ஏழை ஒருவரால் செய்யப்பட்டிருந்தால், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும்.

செல்வாக்கு மிக்கவர்
ஆனால் என் விஷயத்தில், அவர் செல்வாக்கு மிக்கவர் என்பதால், அவர் சுதந்திரமாக சுற்றி வருகிறார். நான் நீதிக்காக ஒவ்வொரு கதவையும் தட்டி வருகிறேன். இந்நிலையில், இந்த விஷயத்தில் தலையிட்டு நீதியை பெற எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











