இதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?.. ஜனநாயகன் விவகாரம்.. பி.சி. ஸ்ரீராம் பரபரப்பு போஸ்ட்!
சென்னை: ஒரு படத்தை ஒரு அரசாங்கமே எதிர்ப்பது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? என பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து டிசம்பர் மாதமே சென்சாருக்கு அந்த படம் அனுப்பப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் சென்சாரில் இருந்த உறுப்பினர் ஒருவர் ஆட்சேபணம் தெரிவிக்க படத்திற்கு சென்சார் வழங்கப்படாமல் ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றால் படம் வெளியாவதில் தாமதம் ஆகும் என நினைத்த தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. ஆனால், நீதிமன்றத்தில் முதலில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜனவரி 9ம் தேதி தனி நீதிபதி படத்தை வெளியிடலாம் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், உடனடியாக மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் தனி நபர் நீதிபதி பி.டி. ஆஷாவின் தீர்ப்புக்கு எதிராக 2 நபர் அமர்வு வழக்கை ஒத்தி வைத்து விட்டது. மேல்முறையீட்டுக்காக உச்ச நீதிமன்றத்துக்கு சென்ற படக்குழுவுக்கு அங்கேயும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது தான் மிச்சம்.
பராசக்தி மோதல்: விஜய்யின் ஜன நாயகன் படம் ஜனவரி 9ம் தேதி வெளியானால் அந்த படத்தை அடிக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு திட்டமிட்டபடி பராசக்தி படத்தை ஜனவரி 10ம் தேதி வெளியிட கொண்டு வந்து தியேட்டர்களை சரி சமமாக பிரித்ததாக ஆரம்பத்தில் சர்ச்சைகள் கிளம்பின. ஆனால், அதை விட பெரிய பிரச்னையாக படத்தையே ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து விட்டனர்.
பாஜக எதிர்ப்பு: காஷ்மீர் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, துரந்தர் போன்ற படங்களுக்கு எல்லாம் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் சென்சார் கிடைத்து படங்கள் வெளியாகின. பராசக்தி படத்தில் கூட இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள், இந்தி அரக்கி என்கிற வாசகம் இடம்பெற்ற காட்சிகள் இருந்த படத்துக்கு கூட அனுமதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால், ஜன நாயகன் படத்துக்கு அனுமதி மறுக்கப்பட ஒரே காரணம் பாஜக கூட்டணிக்கு விஜய் வர சம்மதிக்காதது தான் என தவெகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பி.சி. ஸ்ரீராம் ட்வீட்: விஜய்யின் ஜனநாயகன் படம் இந்த மாதம் மட்டுமல்ல தேர்தல் நடைபெற்று முடியும் வரை வெளியாக வாய்ப்பே இல்லை என்றும் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றால் கூட மொத்த படத்தையும் காலி செய்து தான் ரிலீஸ் செய்ய வைப்பார்கள். கமர்ஷியல் படத்துக்கு இந்தளவுக்கு கிடுக்கிப்பிடி ஏன் என்கிற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், "The might of the Indian state is fighting over one cinema. What a disgrace. #JanaNayagan" என போஸ்ட் செய்துள்ளார். வலிமையான இந்திய அரசு சாதாரணமான ஒரு படத்துக்கு எதிராக சண்டையிடுவது ரொம்பவே அவமானம் என ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் பதிவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக, பாஜகவை விஜய் கடுமையாக அரசியல் களத்தில் எதிர்த்த நிலையில் தான் அவரது படம் வெளியாகவில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











