நீ அழகா இருக்கேன்னு நினைக்கல.. அந்த அலைபாயுதே லவ் சீன்.. அப்படியொரு ஹிட் அடிக்க காரணம் இதுதானாம்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் பீஸ் படைப்பான அலைபாயுதே ரிலீசாகி 20 ஆண்டுகள் ஆகியுள்ளது.
மணிரத்னம், பி.சி. ஸ்ரீராம், ஏ.ஆர். ரஹ்மான், மாதவன், ஷாலினி என பல பாசிட்டிவ் வைப்ரேஷன் இணைந்து உருவாக்கிய இந்த படம் இன்னமும், எபிக் காதல் படமாக கொண்டாடப்படுகிறது.
அதிலும், அந்த ரயில்வே ஸ்டேஷனில், "நீ அழகா இருக்கேன்னு நினைக்கல.." என அழகாக மாதவன் புரொபோஸ் பண்ணும் காதல் காட்சியை தமிழ் சினிமா ரசிகர்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

20 வருஷம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படம் ரிலீசாகி நேற்றுடன் 20 ஆண்டுகள் நிறைவு பெற்றன. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல படங்கள் ரிலீஸ் ஆகி வெற்றி பெறும் நிலையில், மாதவன், ஷாலினியின் காதல் காவியமான அலைபாயுதே என்றுமே தமிழ் ரசிகர்களுக்கு தனி ஃபேவரைட் படம் தான்.

கெமிஸ்ட்ரி
நடிகை ஷாலினி ஹீரோயினாக குறைவான படங்களிலேயே நடித்திருந்தாலும், ஒவ்வொரு படத்திலும், அவரது நடிப்பு தனித்துவம் பெற்றிருக்கும். அலைபாயுதே படத்தில் மாதவன் உடன் ஷாலினி நடித்த ரொமான்ஸ் காட்சிகளில் அப்படியொரு கெமிஸ்ட்ரி நிறைந்திருக்கும். அதிலும், "சினேகிதனே", "காதல் சடுகுடு" பாடல்கள் எல்லாம் வேற லெவல்.

எல்லாமே ஹிட் தான்
அலைபாயுதே படத்தின் வெற்றிக்கு இன்னொரு மிகப்பெரிய பலம் யார் என்றால் ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான். பி.சி. ஸ்ரீராமின் கேமரா ஒரு பக்கம் வித விதமான கலர்ஸில் விளையாட, ரஹ்மான் இசையில் வரலாறு படைத்திருப்பார். பச்சை நிறமே, சினேகிதனே, காதல் சடுகுடு, எவனோ ஒருவன் வாசிக்கிறான் என ஒவ்வொரு பாடலும் செம ஸ்பெஷலாக அமைந்திருக்கும்.

சூப்பர் சீன்
அலைபாயுதே என்று சொன்னதும் பலரது நினைவிற்கும் வருவது அந்த டிரைனில் மாதவன், நடிகை ஷாலினிக்கு லவ் புரொபோஸ் செய்யும் காட்சி தான். "நான் உன்னை விரும்பல.. உன்மேல ஆசைப்படல.. நீ அழகா இருக்கேன்னு நினைக்கல.. ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு.. யோசிச்சு சொல்லு" என மாதவன் பேசும் வசனங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது.

என்ன காரணம்
இந்த காட்சி அந்த அளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்க என்ன காரணம் என்பது குறித்த ரகசியம் வெளியாகி உள்ளது. நடிகர் மாதவன் ஷாலினிக்கு பதிலாக, அந்த இடத்தில் தனது மனைவி சரிதாவை நினைத்துக் கொண்டு நடித்தாராம். அதே போல நடிகை ஷாலினி அந்த காட்சியில் மாதவனுக்கு பதிலாக அஜித்தை நினைத்துக் கொண்டு நடித்தது தான் அந்த மேஜிக்குக்கு காரணமாம்.
பிசி ஸ்ரீராம் ட்வீட்
அலைபாயுதே படம் குறித்த பல கேள்விகளை ரசிகர்கள் தன்னிடத்தில் எழுப்பியுள்ளனர் என்றும், படத்தில் எந்த காட்சி உங்களுக்கு ஃபேவரைட் என்பதே பலரது கேள்வியாக இருந்தது என்று கூறிய ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், அலைபாயுதே படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனது ஃபேவரைட் தான் என்று கூறியுள்ளார். ஒரு காட்சியை சிறப்பாக கூறிவிட்டால், நான் ஒளிப்பதிவு செய்த மற்ற காட்சிகளை அது குறைத்து மதிப்பிட்டு விடும் என்றும் தற்போது ட்வீட் போட்டு பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











