Peddi Day 5 Box Office - ராம் சரணின் பெத்தி 5வது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸில் மிரட்டுதே ப்பா!
சென்னை: ராம் சரண் நடிப்பில் புச்சி பாபு சனா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் பெத்தி. ஜான்வி கபூர் இதில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அதீத எதிர்பார்ப்புடன் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் படம் வெளியாகி ஐந்து நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.
ஷங்கர் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்போடு நடித்த கேம் சேஞ்சர் தோற்றது ராம் சரணுக்கு ரொம்பவே அப்செட். எனவே தனது கம்பேக்கை பெரிய அளவில் கொடுக்க வேண்டும் என்ற பிளானில்; புச்சி பாபு சனா இயக்கத்தில் பெத்தி படத்தில் நடித்தார். ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க; இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கடந்த நான்காம் தேதி இப்படம் உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது.

எப்படி இருக்கிறது படம்: முரளிகாந்த் என்பவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான இப்படத்தில் ரொம்பவே தெலுங்கு மசாலாவை தடவிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் பல காட்சிகள் நம்பும்படியாகவே இல்லை என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்து. ஆந்திரா, தெலங்கனா ரசிகர்களிடம் இந்தப் படம் அமோக வரவேற்பை பெற்றாலும், தமிழ் ஆடியன்ஸிடம் சுத்தமாக எடுபடவில்லை.
ஜான்வி கபூர் சர்ச்சை: அதிலும் ஜான்வி கபூர் தொடர்பான காட்சிகள் எல்லாம் ரொம்பவே அபத்தமாக இருந்தன. இதுதொடர்பான சர்ச்சை பெரிய அளவில் எழுந்து; பிறகு இயக்குநர் மன்னிப்பு கேட்டதால் ஒருவழியாக ஓய்ந்தது. அவர், 'மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன். பெண்களை நான் போக பொருளாகவோ, கவர்ச்சி பொம்மையாகவோ பார்த்ததே இல்லை. பெண்களை நான் மதிக்கிறேன். ஜான்வி தொடர்பான காட்சிகள் மாற்றப்படும்' என தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் சண்டை வேறு: அதேபோல் கிரிக்கெட் போட்டியின்போது படத்தில் நடக்கும் சண்டை காட்சியும் பெரிய ட்ரோலை சந்தித்திருக்கிறது. 15 வயது ஆன வைபவ் சூர்யவன்ஷி இப்போது கிரிக்கெட்டையே கலக்கிக்கொண்டிருக்கிறார். அவர் மட்டும் அந்த சண்டை காட்சியை பார்த்தால், என்னங்க பேட்டை வைத்து என்னென்னம்மோ செய்றீங்க என விழி பிதுங்கி கேள்வி கேட்பார் என்று ஏகப்பட்ட மீம்ஸ்களும் பறந்துவருகின்றன. படத்தில் மசாலாவை அதிகம் திணித்து பார்ப்பவர்களை குதறிவிட்டார்கள் என கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
சக்கைப்போடு போடும் வசூல்: அதேசமயம் படத்தின் வசூல் பெரிய அளவில் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. நேற்றோடு படம் வெளியாகி ஐந்து நாட்கள் நிறைவடைகின்றன. ஐந்தாவது நாளான நேற்று இந்தியாவில் 12 கோடியே ஐந்து லட்சம் ரூபாயை 7,905 காட்சிகளில் வசூலித்திருப்பதாக Sacnilk இணையதளம் தெரிவித்திருக்கிறது. ஐந்து நாட்களில் மொத்தம் அந்தப் படம் இங்கே 200 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது எனவும்; உலகம் முழுவதும் 248 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும் அந்த இணையதளம் கூறுகிறது. படக்குழுவின் கணக்கை பொறுத்தவரை, 290 கோடி ரூபாய் வரை படம் வசூலித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
