Pepsi Uma Re entry - ரீ என்ட்ரி கொடுக்கிறாரா பெப்சி உமா - குஷிப்படுத்தும் தகவல்
சென்னை: Pepsi Uma Re Rentry (பெப்ஸி உமா ரீ என்ட்ரி) 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் தொகுப்பாளரான பெப்சி உமா மீண்டும் சின்னத்திரையில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
வெள்ளித்திரையில் தோன்றி பிரபலமடைந்தவர்கள் போலவே சின்னத்திரையில் தோன்றி பிரபலமடைந்தவர்களும் தமிழ்நாட்டில் ஏராளம் இருக்கின்றனர். குறிப்பாக சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்களும் அதில் அடக்கம். இப்போது பெரிய ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனே கூட ஒருகாலத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக இருந்தவர். இப்படி பலர் இருக்க அதில் பெப்சி உமா தனித்துவமானவர்.

இதயங்களை பொங்க வைத்த பெப்சி உமா: வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த பெப்சி உமா, சன் டிவியில் ஒளிபரப்பான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். அவரது தோற்றமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு ரசிகர், ரசிகைகளின் இதயத்தை கவர்ந்தது. இதன் காரணமாக எல்லோரது வீட்டிலும் ரேஷன் கார்டில் சேர்க்கப்படாத உறுப்பினராக மாறினார் உமா.
வெள்ளித்திரைக்கு நோ சொன்ன உமா: அவருக்கு இருந்த க்ரேஸை பார்த்து வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்புகள் தேடிவந்தன. ரஜினிகாந்த்தின் முத்து படத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பு, கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பு என எதையுமே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி சச்சினுடன் விளம்பரம், ஷாருக்கானுடன் ஒரு படம் என்பதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தைரியமும், தெளிவான பார்வையும் இன்றுவரை பலராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒதுங்கிய பெப்சி உமா: பெப்சி உங்கள் சாய்ஸ் மூலம் வெகு பிரபலமான உமாவுக்கு கட் அவுட் வைக்கப்போகும் நிகழ்வும் அரங்கேறியது. அதேபோல் பெப்சி உமா புடவை, தோடு, பொட்டு போன்றவைகளும் விற்கப்பட்டது. இந்தச் சூழலில் தீடிரென சன் டிவியிலிருந்து ஒதுங்கிய உமா ஜெயா டிவிக்கு சென்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் சன் டிவி போல் அங்கு அவருக்கு கம்ஃபோர்ட் கிடைக்கவில்லை. மேலும் சில பிரச்னைகளையும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சின்னத்திரைக்கு ஒட்டுமொத்தமாக முழுக்குப்போட்டுவிட்டார்.

விருது பெற்ற உமா: பெப்சி உமா எங்கு இருக்கிறார் என்றே பலரும் மறந்துபோன சூழலில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்படுவதற்கு முன்பு ஒரு ஏவி ஒளிபரப்பப்பட்டது. அதில் பெப்சி உமா குறித்து பொதுமக்களிடம் கேட்கையில், பேசிய அனைவருமே உமாவின் தமிழ் உச்சரிப்பையும், அவரையும் சிலாகித்தனர். மேலும், அவர் ரீ என்ட்ரி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ரீ என்ட்ரி கொடுக்கிறாரா உமா?: ஏறத்தாழ 20 வருடங்கள் கழித்தும் பெப்சி உமாவுக்கு இப்படி ஒரு க்ரேஸ் இருக்கிறதா என அனைவருமே அந்த வீடியோவை பார்த்தபோது ஆச்சரியத்தில் மூழ்கினர். இந்நிலையில் பெப்சி உமா ரீ என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில்தான் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் எனவும், ஆனால் நிறைய காட்சிகளில் அவர் வரமாட்டார் சில நிமிட காட்சிகளில் மட்டுமே வருவார் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











