Vetrimaaran - குறிப்பிட்ட சாதி வெறுப்பு இருக்கிறது.. இப்படி இருங்கள்.. வெற்றிமாறனுக்கு பேரரசு அட்வைஸ்
சென்னை: நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றிமாறன் அதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவரது கருத்துக்கு பெரும்பாலானோரிடத்திலிருந்து வரவேற்பு கிடைத்த சூழலில் இயக்குநர் பேரரசு கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். சாமானியர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களே அவருக்கு ரசிகராக இருக்கின்றனர். ஏனெனில் அவரது ஒவ்வொரு படத்திலும் அவ்வளவு டீட்டெயிலிங் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை: வெற்றிமாறன் சமீபத்தில் விடுதலை படத்தை இயக்கினார். சூரி, விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தமிழக நக்சல்பாரிகள் குறித்தும், தமிழரசன், புலவர் கலியபெருமாள் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அந்தப் படம் உருவாகியிருந்தது. வழக்கம்போல வெற்றிமாறனின் இந்தப் படமும் பெரும் உரையாடலை ஆரம்பித்துவைத்திருக்கிறது.
விடுதலை 2: விடுதலை படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வரவேற்பை பெற்ற சூழலில் இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. விடுதலை 2 ஷூட்டிங் இப்போது மும்முரமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார்.
அன்னபூரணி நீக்கம்: இதற்கிடையே நடிகை நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதனை பார்த்த ஒருதரப்பினர் மத உணர்வுகளை புண்படுத்தும்படி படத்தில் வசனங்கள் இருப்பதாக புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் இருந்து படம் நீக்கப்பட்டது.
வெற்றிமாறன் கண்டனம்: அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த வெற்றிமாறன், "சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால் தணிக்கைக்குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புற அழுத்தங்களால் ஓடிடியிலிருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கைக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக்குழுவின் அதிகார்த்தை கேள்விக்குள்ளாக்கும்"" என குறிப்பிட்டிருந்தார்.
பேரரசு கண்டனம்: வெற்றிமாறன் மேற்கூறிய கருத்துக்கு பலரும் தங்களது வரவேற்பை தெரிவித்தனர். இந்த சூழலில் வெற்றிமாறனுக்கு பேரரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வெற்றிமாறனின் கருத்தை வரவேற்கிறேன். இதே கருத்தை கேரளா ஸ்டோரி படத்தின்போது தெரிவித்திருந்தால் அவரது சினிமா பற்று உறுதியாகியிருக்கும். ஆனால் அன்னபூரணிக்கு தெரிவிக்கும்போது அவரது குறிப்பிட்ட சாதி வெறுப்புதான் வெளிப்படுகிறது. திரைப்பட பற்றாளனாய் இருங்கள் வெற்றிமாறன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











