பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் பற்றிய பேச்சு.. அந்த கேள்வி வந்ததும் எழுந்து போன பேரரசு.. என்ன ஆச்சு?
சென்னை: 8 தோட்டாக்கள், ஜீவி, கேர் ஆஃப் காதல், வனம், ஜோதி, ஜீவி 2, மெமரீஸ், பம்பர், ரெட் சாண்டல்வுட் மற்றும் பகலறியான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் வெற்றி அடுத்ததாக ஹீலர் எனும் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பேரரசு திடீரென எழுந்து சென்றது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது சினிமா பிரபலங்களிடம் சினிமா குறித்த கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கூறிய நிலையில், வாக்குவாதம் வெடித்தது.

பல படங்களை இயக்கி இயக்குநராக பிரபலமான பேரரசு வெற்றியுடன் இணைந்து இந்தப்படத்தில் நடிக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஹீலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பேரரசு நடிக்க உள்ள நிலையில், பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அவர் எழுந்து செல்ல முயற்சித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இயக்குநர் பேரரசு: தளபதி விஜய்யின் திருப்பாச்சி மற்றும் சிவகாசி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் இயக்குநராக பிரபலமானவர் பேரரசு. அதன் பின்னர் அஜித்துக்கு திருப்பதி, பரத்துக்கு பழனி, விஜயகாந்துக்கு தர்மபுரி, அர்ஜுனை வைத்து திருவண்ணாமலை என ஒவ்வொரு படத்தையும் ஊர் பெயர்களை வைத்து இயக்கி பிரபலமானார். ஆனால், அவர் இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி மற்றும் சிவகாசி படங்களை தவிர்த்து மற்ற படங்கள் பெரிதாக ஓடவில்லை.
பாஜகவுக்கு ஆதரவு: இயக்குநர் பேரரசு பல ஆடியோ வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி வந்த நிலையில், அவர் பாஜகவுக்கு தனது வெளிப்படையான ஆதரவையும் வழங்கி வந்தார். இந்நிலையில், ஹீலர் படத்தில் மருத்துவத்துறை பற்றிய கதை என்பதால் நீட் தேர்வு ரத்து செய்யாமல் பாஜக ஏன் இருக்கிறது என்றும் 400 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என சவால் விட்டீர்கள் ஆனால், தற்போது 200 பிளஸில் தான் உள்ளது ஏன் என அரசியல் கேள்விகளை பத்திரிகையாளர்கள் எழுப்பினர்.
கடுப்பான பேரரசு: இது சினிமா விழா சினிமாவைப் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள் என பேரரசு கூற, நீங்கள் இதற்கு முன்பாக அரசியல் பேசவில்லையா? என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப கடுப்பான பேரரசு அங்கிருந்து எழுந்து செல்ல முயற்சித்தார். அவரை கட்டாயப்படுத்தி அமர வைத்த தயாரிப்பாளர் சங்க தலைவர் பத்திரிகையாளர்கள் சினிமா பிரபலங்களிடம் அரசியல் குறித்த கேள்விகளை கேட்கக் கூடாது என எச்சரிக்க அங்கே பெரிய விவாதம் வெடித்தது.
பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ்: பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றவர்கள் எங்கே சென்றாலும் அரசியல் பேசாமல் இல்லை. அவர்களிடம் சென்று அரசியல் பேசாமல் இருங்கள் என உங்களால் சொல்ல முடியுமா என தயாரிப்பாளர் சங்கத் தலைவரை பார்த்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப பேரரசு அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். அந்த இடத்தில் நான் இருந்தால் அவர்களையும் அரசியல் பேசக்கூடாது என்றே சொல்வேன் என்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பேசினார். முன்பெல்லாம் சினிமா பிரபலங்களிடம் அரசியல் கேள்விகளை முன்னணி பத்திரிகையாளர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால், தற்போது எங்கே சென்றாலும் அரசியல் குறித்த கேள்விகளை சினிமா பிரபலங்களிடம் கேட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











