பேரறிவாளன் விடுதலை: கமல், சத்யராஜ், குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்ட பிரபலங்கள் நெகிழ்ச்சி
சென்னை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் இன்று உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
இதனை அறிந்த திரையுலகத்தைச் சேர்ந்த பலர் தங்களது ட்விட்டர் பக்கங்களில் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
அவர்களில் கமல், சத்யராஜ், குஷ்பு, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

கமல் மகிழ்ச்சி
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் என்று கமல் தெரிவித்திருக்கிறார்.

சத்யராஜ் வாழ்த்து
தம்பி பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்விடுதலைக்காகப் போராடிய அற்புதம்மாளுக்கும், குயில்தாசன் ஐயா அவர்களுக்கும், முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக அறிவின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து அமைப்புகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். நீதிக்கு இது ஒரு போராட்டம் இதை நிச்சயம் உலகம் பாராட்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

குஷ்பு நெகிழ்ச்சி
ஒரு தாய் தனது மகனுக்காக நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இது உண்மையில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் கதை. அத்தாய் தனது மகனை மீட்க சட்டத்தின் அத்தனை அமைப்புகளுக்கு எதிராகப் போராடியிருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார்.

படமாக்குவாறா வெற்றிமாறன்?
பேரறிவாளனின் சிறை வாழ்க்கையையும், அவரது தாய் அற்புதம்மாளின் போராட்டத்தையும் அடிப்படையாக வைத்து இக்கதையைப் படமாக உருவாக்க இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

அற்புதம்மாளுக்கு சல்யூட் கஸ்தூரி
பேரறிவாளனின் விடுதலை குறித்துத் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவித்திருக்கும் நடிகை கஸ்தூரி, சட்டப்பிரிவு 142-ஐப் பயன்படுத்தி பேரறிவாளனை ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவித்திருக்கும் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. இதன் மூலம் 31 வருடப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது எனத் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











