சூர்யா வாழ்க்கையில் மட்டுமில்லை எல்லோர் வாழ்விலும் விளையாடுகிறீர்கள்.. ஃபீனிக்ஸ் இயக்குநர் அதிரடி
சென்னை: விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஃபீனிக்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். சமீபத்தில் வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. ரிலீஸுக்கு முன்னதாக சூர்யாவை பலரும் ட்ரோல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் அனல் அரசு, சூர்யாவை ட்ரோல் செய்தவர்கள் பற்றி பேசியிருக்கிறார்.
சினிமாவில் கிடைக்கும் வேலைகளை செய்து; சின்ன சின்ன ரோலில் நடித்து; பிறகு ஹீரோவாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பெரிய நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமின்றி வில்லனாகவும் கலக்கிய அவர் ஹிந்தியிலும் கலக்கிவிட்டார். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க அவரது ரசிகர்கள் வேண்டுகோள் வைத்ததை அடுத்து மீண்டும் கதாநாயகனாக களமிறங்கினார். அப்படி அவர் நடித்த மகாராஜா படம் ஹிட்; ஏஸ் படம் சுமார்.
சூர்யா சேதுபதி: இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. படத்தின் பூஜையில் செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, 'அப்பா வேற நான் வேற்' என பேசினார். அவரது அந்தப் பேச்சை பலரும் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். பிறகு அந்த விவகாரம் கொஞ்சம் ஓய்ந்திருந்தது.

மீண்டும் விமர்சனம்: அதனையடுத்து படத்தின் ரிலீஸுக்கு முன்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் சுவிங்கம் மென்றபடி அனைவருடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டார். அதைப் பார்த்த ரசிகர்களோ, 'சூர்யா ஓவர் ஆட்டிட்யூட் காண்பிக்கிறார்' என்று விமர்சித்தார்கள்.மேலும் அவர் தொடர்பான ட்ரோல் வீடியோக்களை நீக்கக்கோரி அவரது தரப்பு மிரட்டியதாக எழுந்த சர்ச்சைக்கும் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
படம் சுமார்தான்: இப்படி ஏகப்பட்ட இடர்களுக்கிடையே ஃபீனிக்ஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. சுமாரான வரவேற்பைதான் பெற்றது. அதேசமயம் சூர்யா சேதுபதியின் நடிப்பை பெரும்பாலானோர் பாராட்டவே செய்தார்கள். இந்நிலையில் ஃபீனிக்ஸ் படத்தின் வெற்றி விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. அதில் படத்தின் இயக்குநர் அனல் அரசு சில விஷயங்களை ஓபனாக பேசினார்.
அனல் அரசு பேச்சு: அவர் பேசுகையில், "சூர்யா சேதுபதிக்காக மட்டும் இந்த ஃபீனிக்ஸ் திரைப்படம் எடுக்கப்பட்டதில்லை. சூர்யா மீது குற்றச்சாட்டு வைப்பவர்களுக்கும் அவரை விமர்சனம், ட்ரோல் செய்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் சூர்யாவின் வாழ்க்கையில் மட்டும் விளையாடவில்லை. இந்தப் படத்தின் மூலமாக சினிமாவுக்கு வந்திருக்கும் அனைவரது வாழ்க்கையிலும் விளையாடுகிறீர்கள். ஒரு படத்தில் பலரது வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அதனை உணர்ந்து, யோசித்து நடந்துகொள்ள வேண்டும். சூர்யாவுக்கு நான் சொல்வது என்னவென்றால், 'தவறு என்று தெரிந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டுவிடுங்கள். விமர்சிப்பவர்களையும் உறவுகளாக பாருங்கள். மன்னிப்பு பல பிரச்னைகளை தீர்த்து வைத்துவிடும்" என்றார்.


Click it and Unblock the Notifications











