போதைப் பொருள் விவகாரம்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் செல்போன்கள் பறிமுதல்!
மும்பை: போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு சென்ற நடிகைகளின் செல்போன்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவரது தந்தை கே.கே. சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகார் போலீசில் புகார் அளித்தார்.

போதைப் பொருள்
இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது ரியாவின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா போதைப்பொருளை வாங்கி சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.

நடிகை ரியா கைது
இதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த சிலர் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்தது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

சாரா அலி கான்
நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனால் அவர்களுக்கு சம்மன் அனுப்பினர். அதன்படி நேற்று முன்தினம் ரகுல் பிரீத் சிங்கிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் தீபிகா படுகோனிடம் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஒப்புக்கொண்டார் தீபிகா
கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மானேஜர் கரிஷ்மா பிரகாசுக்கும் தனக்கும் இடையே போதைப் பொருள் குறித்து நடந்ததாகக் கூறப்படும் வாட்ஸ்-அப் உரையாடல்களை தீபிகா ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

செல்போன் பறிமுதல்
இந்நிலையில், விசாரணையில் கலந்துகொண்ட தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் செல்போன்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருள் தொடர்பான உரையாடல் நடந்திருக்கிறதா என்பதை கண்டறிய போலீசார் இதைப் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











