கொரோனாவுக்கு நண்பர்களை இழந்தேன்.. இன்னும் அச்சுறுத்தல் இருக்கிறது.. முன்னாள் ஜேம்ஸ்பாண்ட் கவலை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: கொரோனாவுக்கு இரண்டு நண்பர்களை இழந்துவிட்டேன் என்றும் இன்னும் அந்த அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகம் தவித்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா உட்பட பல்வேறு நாடுகளில் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்கிறது. இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தீவிர நடவடிக்கை
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.35 லட்சத்தை தாண்டி இருக்கிறது. சுமார் 80 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும் கோவிட்-19-ன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஜேம்ஸ்பாண்ட் நடிகர்
இந்நிலையில் பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர், பியர்ஸ் பிராஸ்னன், கொரோனாவுக்கு தனது இரண்டு நண்பர்களை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இவர், கோடன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், த வேர்ல்ஸ் இஸ் நான் எனஃப், டை அனதர் டே ஆகிய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தவர். பாண்ட் படங்கள் தவிர, த வேர்ல்ட்ஸ் எண்ட், சர்வைவர், நோ எஸ்கேப் உட்பட பல படங்களிலும் நடித்துள்ளார்.

கொரோனா தீவிரம்
டி.வி. தொடர்களிலும் நடித்துள்ள இவர், இப்போது சிண்ட்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். டிஸ்னி தயாரிக்கும் ஆக்ஷன் படமான இதில், பாடகி கேமிலா கேபெல்லா டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போதுதான், கொரோனா தீவிரம் அடைந்தது. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

போரில் இருக்கிறோம்
அவர் கூறும்போது, '45 வயதுடைய இரண்டு நண்பர்களை இழந்துவிட்டேன். நீங்கள் எங்கு இருந்தாலும் எவ்வளவு அழகாக இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான இந்த அச்சுறுத்தல் உங்களிடம் இருக்கிறது. ஒரு பெரும்பாறையை மேல் நோக்கி தொடர்ந்து தள்ளிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் போரில் இருக்கிறோம். மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

விமானத்தில் இருந்தபோது
இதற்கெல்லாம் பிறகு தயவும் விழிப்புணர்வும் இந்த கிரகத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ஒரு நாள் நான் விமானத்தில் இருந்தபோது, நீங்கள் வெளியே செல்ல முடியாது என்றார்கள். நான் என் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனடியாக வீட்டுக்குச் சென்றுவிட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











