ப்ளீஸ் பணத்தை திருப்பி கொடுங்க.. பாலாவிடம் கெஞ்சிய பிதாமகன் தயாரிப்பாளர்!
சென்னை : சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் பிதாமகன் தயாரிப்பாளர் விஏ துரை பாலாவிடம் தான் கொடுத்த பணத்தை திரும்பி கொடுக்கும் படி கெஞ்சி கேட்டுள்ளார்
எவர் கிரின் மூவிஸ் தயாரிப்பாளரான விஏ துரை, என்னம்மா கண்ணு, பிதாமகன், கஜேந்திரா, லூட்டி போன்ற படங்களை தயாரித்து தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்தார்.
பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தை தயாரித்த இவர், தற்போது மருந்து செலவுக்கு கூட காசு இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்.

தயாரிப்பாளர் விஏ துரை
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான விஏ துரை, கஜேந்திரா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், மிகவும் நொடிந்து போய், வீடு வாசல் என அனைத்தையும் இழந்து, தற்போது சாலிகிராமத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வருகிறார்.

மருத்துவசெலவுக்கு கூட காசு இல்லை
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு காலில் புண் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக காலை அரித்து வருகிறது. இவரை கவனித்துக்கொள்ளக்கூட ஆள் இல்லாத மோசமான நிலைமையில் இருக்கிறார். தயாரிப்பாளர் விஏ துரையின் மோசமான நிலையை காட்டி, அவரது நண்பர் மருத்துவ செலவுக்கு உதவும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அனைத்துப்படமும் பிளாப்
இந்நிலையில், தயாரிப்பாளர் விஏ துரை யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் எடுத்த என்னம்மா கண்ணு,லூட்டி போன்ற படங்கள் தான் சுமாரா ஒடுச்சு மற்றபடி நான் எடுத்த அனைத்துப்படங்களும் பிளாப் தான். விஜய்காந்த் நடித்த கஜேந்திரா படத்தை 11 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தேன், அதில் விஜய்காந்துக்கு 3 கோடி சம்பளம் கொடுத்தேன். ஆனால், அதில் போட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட திரும்பிவரவில்லை. இதனால், நான் சேர்த்துவைத்திருந்த பணம், வீடு எல்லாமே போய்விட்டது.

பாலா என்னை ஏமாற்றிவிட்டார்
சினிமாவை பொருத்தவரை நான் யாருக்கும் பணம் தர வேண்டியது இல்லை. ஆனால், பாலா தான் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றி விட்டார். இரண்டு வருடத்திற்கு முன்னாடி 25 லட்சம் ரூபாய் புது படத்திற்காக கொடுத்தேன். ஆனால், அவரிடம் அதை திருப்பி கேட்ட போது, அது நீங்கள் பிதாமகன் படத்திற்கு கொடுக்கவேண்டிய பாக்கி என்று கூறிவிட்டார். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டேன் ஆனால், என்னை யாரும் அழைத்து பேசவில்லை என்றார்.

பணத்தி திருப்பி கொடுங்க
நேர்காணலிலேயே பாலாவுக்கு கோரிக்கை வைத்தார். அதில், பாலா சார், நான் இப்போ ரொம்ப பெரிய கஷ்டத்தில் இருக்கிறேன், நடக்கமுடியாமல் அவதிப்பட்டு வருகிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் ஒன்றும் செய்ய முடியாமல் இப்போது வீட்டில் இருக்கிறேன். சிகிச்சைக்காக மறுபடியும் நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆனால், மருத்துவ செலவுக்கு என்னிடம் பணம் இல்லை. உங்களிடம் நான் கொடுத்த பணத்தை என்னிடம் திரும்பிகொடுத்தால் உதவியாக இருக்கும்.

வங்கி ரசீது என்னிடம் இருக்கு
நான் பணத்தை திரும்பி கேட்டபோது, பிதாமகன் படத்திற்காக தரவேண்டியது பழைய பாங்கி என்று சொல்லிவிட்டீர்கள், தயவு செய்து அப்படி சொல்லாதீங்க சார், நான் மிகவும் சிரமத்தில் இருக்கிறேன் வாங்குன பணத்தை மட்டும் திருப்பிகொடுத்தால் போதும்,வேறு எந்த கோரிக்கையும் நான் வைக்கவில்லை. நான் பணம் கொடுத்ததற்கான வங்கி ரசீது என்னிடம் உள்ளது. இந்த நேரத்தில் அந்த பணத்தை கொடுத்து உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று பாலாவிடம் தயாரிப்பாளர் விஏ துரை கெஞ்சினார்.


Click it and Unblock the Notifications











